5 மாநிலங்களில் யாருக்கு வெற்றி? நாளை வாக்கு எண்ணிக்கை.. பரபரப்பில் கட்சிகள்
டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 11ம் தேதியான நாளை எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் விறுவிறுப்பாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கும், நவம்பர் மற்றும் டிசம்பரில் தேர்தல்கள் நடைபெற்றன.
சட்டீஸ்கரில் இரு கட்டங்களாக நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20ம் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மத்திய பிரதேசம், மிசோராமில் நவம்பர் 28ம் தேதியிலும், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் டிசம்பர் 7ம் தேதியிலும், சட்டசபை தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
மாலைக்குள் முழு ரிசல்ட்
இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள், தேர்தல் கமிஷன் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்பட உள்ளது. காலை 11 மணிக்குள் 5 மாநிலங்களிலும் வெற்றி பெறப்போவது யார் என்பது தொடர்பாக, டிரெண்ட் வெளியாகிவிடும். மாலைக்குள் வாக்குகள் முழுமையாக, எண்ணப்பட்டு, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
பாஜக மீது எதிர்பார்ப்பு
மத்திய பிரதேசத்தில், 306 வாக்கு எண்ணிக்கை மையங்களும், தெலுங்கானாவில், 43 வாக்கு எண்ணிக்கை மையங்களும், சட்டீஸ்கரில் 27 வாக்கு எண்ணிக்கை மையங்களும், மிசோராமில் 40 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி, நடைபெறுவதால் அங்கு அந்த கட்சிக்கு அக்கினி பரிட்சை காத்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இது பார்க்கப்படுகிறது.