சாதி, மதம் அப்றம்.. முதலில் இந்தியன்! அனைவரும் சமம் - சுதந்திர தின உரையில் அழுத்தி சொன்ன ஜனாதிபதி
டெல்லி: இந்தியாவில் அனைவரும் சமம் என்றும், அனைவருக்கும் சமமான வாய்ப்புகள், உரிமைகள், கடமைகள் இந்த மண்ணில் இருப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் பேசிய அவர், "77 வது சுதந்திர தின வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த காற்றில் கலந்துள்ள கொண்டாட்டத்தை கண்டு நான் மகிழ்கிறேன்.

சுதந்திர தின கொண்டாட்டத்துக்காக நாட்டின் அனைத்து பகுதிகளில் உள்ள நகரங்கள், கிராமங்களில் குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள் என அனைவரும் தயாராகி வருவதை பார்க்கையில் நமக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்திய மக்கள் அமிர்த பெருவிழாவை உற்சாகமாக கொண்டாட உள்ளார்கள்.
நான் படித்த கிராம பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பங்கேற்றபோது ஏற்பட்ட உற்சாகத்தை என்னால் அடக்க முடியவில்லை. மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டபோது எங்கள் உள்ளே மின்சாரம் பாய்ந்த உணர்வு ஏற்பட்டது. தேசபக்தி நிறைந்த உள்ளத்தோடு, தேசிய கொடியை வணங்கி, தேசிய கீதத்தை பாடினோம். இனிப்புகளை வழங்கி தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. பல நாட்கள் அவை மனதில் ஓடிக்கொண்டு இருந்தன.
பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தபோது எனக்கு அந்த வாய்ப்பு மீண்டும் கிடைத்தது. நாம் வளரும்போது குழந்தைகளை போன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால், இந்த பண்டிகைகளை கொண்டாடுவதில் இருக்கும் தேச பக்தியின் தீவிரம் துளிகூட குறையவில்லை என்று நம்புகிறேன்.
நாம் தனிநபர்கள் இல்லை, மிகப்பெரிய சமூகத்தின் ஒரு பகுதி என்ற உணர்வை சுதந்திர தினம் நினைவூட்டுகிறது. இது மிகப்பெரிய சமூகம், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் குடிமக்களுடைய சமூகம். நாம் சிறந்த ஜனநாயகத்தின் அங்கமாக இருக்கிறோம் என்பதால்தான் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்.
நம்மில் ஒவ்வொருவரின் பின்னாலும் பல்வேறு அடையாளாங்கள் இருக்கின்றன. சாதி, மதம், மொழி, மாநிலம், தொழில், குடும்பங்களின் அடிப்படையில் நமக்கு தனித்தனியாக அடையாளங்கள் உள்ளன. ஆனால், அனைத்துக்கும் மேலாக நமக்கு எல்லாம் ஒரு அடையாளம் உள்ளது. இந்திய குடிமகன் என்ற அடையாளமே அது. நாம் அனைவரும் சமம். அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை, சமமான கடமைகள் உள்ளன." என்றார்.












Click it and Unblock the Notifications