ஞானவாபி மசூதி வழக்கில் பரபரத்த வாதம்.! தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுமதி அளித்த அலகாபாத் ஐகோர்ட்!
டெல்லி: வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு நடத்தியது குறித்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இங்கிருந்த இந்து கோயில் ஒன்றை இடித்துவிட்டே அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
வழக்கு: இதற்கிடையே இது தொடர்பாக நான்கு பெண்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அங்கு தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜூலை 21ஆம் தேதி ஆய்வு நடத்தப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் இதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இதில் இன்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதில் ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அனுமதி அளித்து அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மசூதியில் அகழாய்வு நடத்தக் கூடாது என்ற இஸ்லாமிய அமைப்புகளின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆய்வு: மேலும், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி கோயிலின் மீது கட்டப்பட்டதா என்பதை அறிய இந்தியத் தொல்லியல் துறை தனது ஆய்வைத் தொடரும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் மாவட்ட நீதிமன்றம் அளித்த உத்தரவு நியாயமானது மற்றும் சரியானது என்றும், அதில் தலையிட முடியாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆய்வு அவசியமான ஒன்று என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நாளை மீண்டும் சர்வே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் தொல்லியல் ஆய்வை நடத்தக் கடந்த ஜூலை 21ஆம் தேதி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 24ஆம் தேதி ஆய்வு தொடங்கப்பட்டது. இருப்பினும், மசூதியின் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்த நிலையில், ஆய்வு நிறுத்தப்பட்டது.
என்ன வழக்கு: இந்த கட்டிடம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும், ஆய்வின் போது கட்டிடத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டு இடிந்து விழ வாய்ப்புள்ளதாக வாதிடப்பட்டது. மேலும், இங்கு நடக்கும் தொல்லியல் ஆய்வு என்பது சட்டங்களை மீறுவதாக இருக்கும் என மசூதி தரப்பில் வாதிட்டது. இருப்பினும், இதை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி, மசூதி தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். மேலும், அங்கே தொல்லியல் ஆய்வை நடத்தலாம் என உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் இந்து பெண்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், "இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும். நாளையே இந்த ஆய்வு தொடங்கப்படும். இது உயர் நீதிமன்றத்தின் மிக முக்கியமான முடிவு. மசூதியின் கட்டமைப்பை ஆய்வு பாதிக்கும் என்ற அவர்களின் வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது" என்று அவர் தெரிவித்தார்.
அதேநேரம் மசூதியில் சிவலிங்கம் இருந்ததாக இந்து தரப்பினர் கூறிய நிலையில், அது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஆய்வை நடத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த தொல்லியல் சோதனையில் சிவலிங்கம் தொடர்பான ஆய்வுகள் எதுவும் நடத்தப்படாது எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications