4 ஆண்டுகளுக்கு முந்தைய ட்வீட்டால் ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைர் கைது- போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி!
டெல்லி: 4 ஆண்டுகளுக்கு முந்தைய ட்விட்டர் பதிவுக்காக கைது செய்யப்பட்டுள்ள ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைரை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Recommended Video
வலதுசாரிகள் பரப்பிவிடும் போலி செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து அம்பலப்படுத்தி வந்தது ஆல்ட் நியூஸ் இணையதளம். இதன் இணை நிறுவனர் முகமது ஜுபைர்.

இந்து சாமியார்கள் மாநாட்டில், முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என பேசியதை முகமது ஜுபைர் கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டிருந்தார். இதற்காக உ.பி. போலீசார் அவர் மீது வழக்கும் பதிவு செய்திருந்தனர். பல்வேறு போலி செய்திகளின் உண்மை தன்மையை அம்பலப்படுத்தியதால் வலதுசாரிகளால் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார் முகமது ஜுபைர்.
இந்நிலையில் 2020-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றுக்காக டெல்லி போலீஸ் விசாரணைக்கு நேற்று சென்றிருந்தார் ஜுபைர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருந்தார் ஜுபைர். இருந்தபோதும் நேற்று இரவு திடீரென முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டார். முன்ஜாமீன் பெற்ற வழக்கில் டெல்லி போலீசார் எப்படி கைது செய்ய முடியும்? என்கிற குழப்பம் இருந்து வந்தது.
பின்னர் விளக்கம் அளித்த டெல்லி போலீஸ், 2018-ம் ஆண்டு மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ட்விட்டர் பதிவுகளை முகமது ஜுபைர் வெளியிட்டிருந்தார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தது. அத்துடன் முகமது ஜுபைர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனிடையே முகமது ஜுபைர் கைதுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் முகமது ஜுபைர் கைது பெரும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications