அமலாக்கப் பிரிவு சம்மன்களுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமேசான் ரிட் மனு
டெல்லி: பியூச்சர் நிறுவனத்தில் முதலீடு செய்த விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு விசாரணையை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனம் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்காவின் ஈ காமர்ஸ் நிறுவனமான அமேசான், 2019-ல் பியூச்சர் குழுமத்தில் ரூ1430 கோடி முதலீடு செய்திருந்தது. இதன் மூலம் பியூச்சர் நிறுவனத்தின் 49% பங்குகளை அமேசான் கைப்பற்றியது.

இன்னொரு பக்கம் ப்யூச்சர் நிறுவனம் தமது சில்லறை வர்த்தகம் சார்ந்த சொத்துகளை ரிலையன்ஸ் குழுமத்துக்கு ரூ24,500 கோடிக்கு விற்பனை செய்தது. இதற்கு அமேசான் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக அமேசான் மற்றும் ப்யூச்சர் குழுமங்கள் பரஸ்பரம் வழக்கு தொடர்ந்தன.
மேலும் இந்திய காம்பெடிசன் கமிஷன் எனப்படும் சி.சி.ஐ., அமேசான் - ப்யூச்சர் இடையேயான ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியது. பியூச்சர் நிறுவனத்தில் அமேசான் முதலீடு செய்வதற்கான அனுமதியையும் ரத்து செய்தது சி.சி.ஐ. மேலும் அமேசான் நிறுவனத்துக்கு ரூ 200 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் வெளிநாட்டு முதலீட்டு சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அமலாக்கப் பிரிவு வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் தங்களது நிறுவனத்துக்கு சம்மன் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனம் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications