அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு.. அமித்ஷா பதவி விலக கோரி காங்கிரஸ் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. எனவே அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இன்று காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு செவி கொடுத்து கேட்காமல் இருந்து வருகிறது. குறிப்பாக அதானி விஷயத்தில் உரிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தல்கள் எழுந்த போது, அவையை ஒத்திவைத்து அதற்கு மத்திய அரசு தனது பாணியில் பதிலளித்ததாக காங்கிரஸ் எம்பிக்கள் விமர்சித்துள்ளனர்.

"நாங்கள் முதல் நாள்தான் இந்த பிரச்னையை எழுப்பினோம். அவர்கள் அவையை ஒத்திவைத்துவிட்டார்கள். இரண்டாவது நாள் நாங்கள் எழுந்து நின்றோம், உடனே அவையை ஒத்திவைத்துவிட்டார்கள். மூன்றாவது நாள் நாங்கள் பேச முயன்றோம் உடனே அவையை ஒத்திவைத்துவிட்டார்கள். உண்மையில் அவர்கள்தான் அவையை ஒத்தி வைக்கிறார்கள். இதற்கு நாங்கள் காரணமல்ல" என்று காங்கிரஸ் எம்பிக்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இப்படி இருக்கையில், அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியிருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதை போல மாறியிருக்கிறது. அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அவர் பதவி விலக வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டத்தை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் திமுக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. சென்னை மாநில கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.
அமித்ஷா பேசியது என்ன?:
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு தின சிறப்பு விவாதம் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசியிருந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்திய அரசு மீது சரமாரியான விமர்சனங்களை அடுக்கியிருந்தனர். இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்து அமித்ஷா பேசியிருந்தார்.
அவர், "அம்பேத்கர், அம்பேத்கர் என்று முழக்கமிடுவது இப்போது ஃபேஷனாகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாரதிய ஜனதா கட்சி மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்" என்று பேசியிருந்தார்.
அமித்ஷா விளக்கம்:
தனது பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அமித்ஷா இது குறித்து விளக்கமளித்திருந்தார். "எனது பேச்சை முழுமையாக கேளுங்கள். அதன்பின்னர் விமர்சிக்கலாம். ஆனால் நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை கேட்காமலேயே என் மீது விமர்சனங்கள் அடுக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் நான் பேசியதை காங்கிரஸ் கட்சியினர் திரித்து கூறுகிறார்கள். அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்தி பிடிப்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகதான். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. காங்கிரஸ்தான் அவருக்கு எதிரானது.
எனது பேச்சுக்கு ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். அவருக்கு அதுதான் நிம்மதியளிக்கும் எனில், ராஜினாமா செய்ய தயார். ஆனாலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவர் எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர்ந்திருப்பார். காங்கிரஸின் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உரிய நடவடிக்கை மேற்காள்ளப்படும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications