மோடிக்கு நெருக்கம்.. யுபிஎஸ்சி தலைவர் திடீர் ராஜினாமா! பதவி முடிய 5 ஆண்டு இருக்கும்போதே விலகல் ஏன்
டெல்லி: சர்ச்சைக்கு நடுவே பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிய 5 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அவர் தனது பொறுப்பை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கி உள்ளார்.
இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை யுபிஎஸ்சி எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதுதவிர மத்திய அரசின் குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட பிற தேர்வுகளையும் யுபிஎஸ்சி தான் மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய யுபிஎஸ்சியின் தலைவராக இருப்பவர் மனோஜ் சோனி. இவர் குஜராத்தை சேர்ந்தவர். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்.
இந்த ஆணையத்தில் மொத்தம் 10 உறுப்பினர்கள், ஒரு தலைவர் பொறுப்பு உள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு யுபிஎஸ்சி உறுப்பினராக மனோஜ் சோனி பொறுப்பேற்றார். அதன்பிறகு 2023 மே மாதம் 16ம் தேதி அவர் யுபிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் தற்போது மனோஜ் சோனி திடீரென்று யுபிஎஸ்சி தலைவர் பதவியில் இருந்து விலகி உள்ளார்.
யுபிஎஸ்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பி உள்ளார். இவரது பதவிக்காலம் என்பது இன்னும் 5 ஆண்டுகள் உள்ளது. மனோஜ் சோனி வரும் 2029 ம் ஆண்டு வரை இந்த பொறுப்பில் நீடிக்க முடியும் என்ற சூழலில் அவர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் மனோஜ் சோனி தனது பதவியை சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி அவரது ராஜினாமா என்பது தற்போது சர்ச்சையாகி உள்ள மகாராஷ்டிரா பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கரின் விவகாரத்துக்கும் தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது போலி சான்றிதழ் கொடுத்த பூஜா கேத்கர் பணியை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மகாராஷ்டிராவின் பயிற்சி பணியில் இருந்து முசோரி பயிற்சி மையத்துக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பூஜா கேத்கரின் சம்பவத்துக்கும், மனோஜ் சோனியின் ராஜினாமாவுக்கும் தொடர்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனென்றால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே அவர் தனது ராஜினாமா முடிவை எடுத்த அதற்கான கடிதத்தை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் மனோஜ் சோனியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. அதோடு யுபிஎஸ்சியின் புதிய தலைவராக இன்னும் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. இதன்மூலம் மனோஜ் சோனியின் ராஜினாமா இன்னும் மத்திய அரசால் ஏற்கப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
மேலும் மனோஜ் சோனி பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். ஏனென்றால் மனோஜ் சோனியும் குஜராத்தை சேர்ந்தவர். குஜராத் பிரதமராக மோடி பதவி வகித்தபோது மனோஜ் சோனியை வதோதராவின் புகழ்பெற்ற எம்எஸ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மோடி நியமனம் செய்தார். அப்போது மனோஜ் சோனிக்கு வயது வெறும் 40 தான். இதன்மூலம் நம் நாட்டின் குறைந்த வயது துணை வேந்தர் என்ற பெயரை மனோஜ் சோனி பெற்றார். அதன்பிறகு மனோஜ் சோனி குஜராத் மாநில அரசின் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 2 முறை பதவி வகித்தார்.












Click it and Unblock the Notifications