"வேடிக்கை பார்க்கும் காலம் மலையேறிவிட்டது!" அமித் ஷா அதிரடி! எல்லையில் 'ஸ்மார்ட் பார்டர் ப்ராஜெக்ட்'
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படையின் விருது வழங்கும் விழா மற்றும் ருஸ்தம்ஜி நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ஆற்றிய அதிரடி உரை கவனம் ஈர்ப்பதாக இருக்கிறது. மேலும், அமித் ஷா இந்த நிகழ்ச்சியில் சில முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பைக் கௌரவித்துப் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பில் ஊடுருவலை அடியோடு ஒழிப்பதற்கான புதிய உத்திகளையும், பாதுகாப்பு வரைபடத்தையும் சர்வதேச மேடையில் வெளியிட்டார்..

பாதுகாப்புத் திட்டம்
பாதுகாப்புப் படைகள் என்பது இனி வெறும் எல்லையைக் கண்காணிக்கும் கடமையாக இல்லாமல், பிராந்தியப் பொறுப்பாக மாற வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமித் ஷா, எல்லையை முழுமையாக லாக் செய்யப் புதிய தொழில்நுட்பப் பாய்ச்சலை அறிவித்துள்ளார்.
ராணுவக் கிரிட்: அடுத்த ஓராண்டிற்குள், ஒட்டுமொத்த இந்திய எல்லைகளிலும் ஊடுருவ முடியாத அளவுக்கு ஒரு பலத்த பாதுகாப்பு வலையம் கட்டமைக்கப்படும்.
ஹைடெக் கருவிகள்: இதற்காகத் தொடங்கப்படவுள்ள "ஸ்மார்ட் பார்டர் ப்ராஜெக்ட்" (Smart Border Project) திட்டத்தின் கீழ் ட்ரோன்கள், ரேடார்கள், நவீன கேமராக்கள் மற்றும் அதிநவீனச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் எல்லைகளில் முழுமையாக நிலைநிறுத்தப்படும்.
புதிய சவால்களுக்குப் பதிலடி: சைபர் அச்சுறுத்தல்கள், ஹைப்ரிட் வார்ஃபேர் மற்றும் ட்ரோன் வார்ஃபேர் ஆகிய சவால்களைச் சமாளிக்கும் வகையில் இந்த புதிய உத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
எல்லை மாநிலங்கள்
வங்கதேசம் உள்ளிட்ட எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் திரிபுரா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநில அரசுகளும் ஊடுருவலைத் தடுப்பதில் முழுமையாகக் கடமைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமித் ஷா, பிஎஸ்எஃப் படைக்கு முக்கியமான சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

அவர் இது தொடர்பாகப் பேசுகையில், "எல்லையோரப் பாதுகாப்பு என்பது பாதுகாப்புப் படைகளோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. பிஎஸ்எஃப் படையினர் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், உள்ளூர் காவல் நிலையங்கள், பஞ்சாயத்துகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஊடுருவலை முற்றிலுமாக ஒழிக்க.. உள்ளூர் கிராம மக்களுடன் வலுவான உறவுகளைக் கட்டியெழுப்புவது அவசியம். இந்தியாவின் மக்கள் தொகைக் கட்டமைப்பில் செயற்கையான மாற்றங்கள் ஏற்படுவதை மத்திய அரசு அணு அளவும் அனுமதிக்காது" என்றும் கூறினார்.
புதிய இயக்கம்
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 'உயர்மட்ட மக்கள் தொகை இயக்கக் குழு' (High Powered Demography Mission) அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இக்குழுவின் மூலம் இந்தியாவின் எல்லையோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் துல்லியமாகக் கண்டறியப்பட்டு, அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். "நக்சலிசத்தை வேரறுத்ததைப் போல, ஊடுருவல் சம்பவங்களையும் வேரோடு ஒழிப்பதே மோடி அரசின் லட்சியம்" என அவர் முழங்கியுள்ளார்.
முந்தைய காலங்களைப் போலப் பயங்கரவாதத் தாக்குதல்களோ அல்லது நக்சலைட் வன்முறைகளோ நடக்கும்போது, அரசு வெறும் பேச்சுவார்த்தைகளில் மட்டுமே ஈடுபட்டு வேடிக்கை பார்க்கும் காலம் மலையேறிவிட்டது என்றார் அமித் ஷா. பயங்கரவாதப் பிரச்சினைகளை அதன் வேர்களிலிருந்தே அடியோடு அழிப்பதுதான் இந்தியாவின் புதிய பாதுகாப்புத் தத்துவம்.. இதுதான் தற்போதைய "மோடி டாக்ட்ரின்" என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
நலத்திட்டம்
பாதுகாப்புப் பணியில் இருக்கும் அனைத்து சிஏபிஎஃப் வீரர்களின் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலனுக்காக, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு மிகப் பெரிய புதிய நலத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications