"மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடையாது!" அமித் ஷா திட்டவட்டம்! தொகுதி மறுவரையறையில் பரபர வாதம்
டெல்லி: மத்திய அரசு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் உள் துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்தார். மேலும், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் மூன்று மிக முக்கியமான மசோதாக்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.. தொகுதி மறுசீரமைப்பு முதல் யூனியன் பிரதேச சட்டங்கள் வரை 3 மசோதாக்கள் இதில் உள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இணைந்து இன்று மூன்று மசோதாக்களை லோக்சபாவில் தாக்கல் செய்தனர்:
- 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, 2026: இது தொகுதி மறுசீரமைப்பிற்கான அடிப்படை மாற்றங்களைக் கொண்டது.
- தொகுதி மறுசீரமைப்பு மசோதா (Delimitation Bill), 2026: PoK உள்ளிட்ட பகுதிகளுக்கான பிரதிநிதித்துவ கணக்குகள் தொடர்பானது.
- யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026: இதை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாகத் தாக்கல் செய்தார்.
மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்ட போதே, காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் எழுந்து கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். ஆனால், உடனே குறுக்கிட்ட அமித் ஷா, நாடாளுமன்ற விதிகளின்படி எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது அமித் ஷா, "ஒரு மசோதாவை அறிமுகம் செய்யும் கட்டத்தில், அதன் தகுதிகள் (Merits) குறித்து விவாதிக்க முடியாது. தொழில்நுட்ப ரீதியான (Technical) ஆட்சேபனைகளை மட்டுமே எழுப்ப முடியும். விவாதத்தின் போது உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் அரசு தரப்பில் வலுவான பதிலடி கொடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
விவாதத்தின் ஒரு கட்டத்தில் உள் ஒதுக்கீடு தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எழுப்பிய கேள்விக்கு, அமித் ஷா தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாகப் பதிவு செய்தார். இது தொடர்பாக அவர், "மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. நமது அரசியலமைப்பு அதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்காது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகளிர் இட ஒதுக்கீட்டை வழங்கவே தொகுதி மறுசீரமைப்பு செய்கிறோம் என்பது மத்திய அரசின் வாதமாக இருக்கிறது. மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு வழங்கும்போது சிறுபான்மை சமூக பெண்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை என்பதே எதிர்க்கட்சிகள் வாதமாக இருக்கிறது. ஆனாலும், அதற்கு வாய்ப்பில்லை என்பதையே அமித் ஷா தனது பதில் மூலம் உறுதி செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications