"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா!
டெல்லி: ''தமிழகத்தில் பாஜகவுக்கான அமைப்பு ரீதியிலான பலம் இன்னும் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் நாங்கள் இன்னும் பலமாக வேண்டி உள்ளது. இதனால் தான் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதை விட எங்களின் 'பெரிய அண்ணாவுடன்' (அதிமுக) கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். அதிமுகவுடனான கூட்டணியே எங்களுக்கு பலம் சேர்க்கிறது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி தனது கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ல் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் அதிமுகவுடன், பாஜக கூட்டணி அமைத்துள்ளது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 18 சதவீதம் வரை வாக்குகள் வாங்கியது. இதனால் தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளதாக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

மேலும் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் பாஜகவுக்கு பலமாக இருக்கும் தொகுதிகளும், அண்ணாமலை போட்டியிட விரும்பிய தொகுதிகளையும் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கவில்லை என நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது பாஜக தொண்டர்களில் ஒரு தரப்பினர் அதிமுக மீதும், பாஜக தலைமை மீதும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அமித்ஷா விளக்கம்
இந்நிலையில் தான் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் பாஜகவின் பலம் குறைவாகவே உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே மேடையில் கூறியிருப்பது பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதாவது டெல்லியில் 'டைம்ஸ் நவ் சுமிட் 2026' நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாகவும், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி, அதிமுக உடன் கூட்டணி அமைத்தது ஏன்? என்பது பற்றி அவர் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதுதொடர்பாக அமித்ஷா கூறியதாவது:
பாஜகவிற்கு பலமில்லை
தமிழகத்தில் பாஜகவுக்கான அமைப்பு ரீதியிலான பலம் இன்னும் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் நாங்கள் இன்னும் பலமாக வேண்டி உள்ளது. இதனால் தான் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதை விட எங்களின் 'பெரிய அண்ணாவுடன்' (அதிமுக) கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம்.
அதிமுக தான் பலம்
அதிமுகவுடனான கூட்டணியே எங்களுக்கு பலம் சேர்க்கிறது. இதனால் கூட்டணி கட்சிகளுடனான உறவு தமிழகத்தில் அவசியம். எனவே பாஜக, அதிமுகவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதோடு, சிறிய பிராந்திய கட்சிகளையும் இணைத்து செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது ஆளும் திமுக மீது எதிர்ப்பு அலை வீசுகிறது. இதனை என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள் வெறுப்பு அரசியலை பரப்பி ள்ளனர். இதனால் தமிழகத்தில் வலுவான பெரும்பான்மையுடன் எங்களின் கூட்டணி ஆட்சி அமைக்கும்'' என்றார்.
பாஜக தொண்டர்கள் ஷாக்
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 25 நாட்கள் மட்டுமே உள்ளது. இப்படியான சூழலில் தமிழகத்தில் பாஜகவிற்கு பலமில்லை என்று அமித்ஷா கூறியிருப்பது தமிழக பாஜக தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications