குஜராத்தில் பரபரப்பு.. அரபிக்கடலில் மீன்பிடித்த இந்திய மீனவரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் கடற்படை!
டெல்லி: குஜராத் மாநிலத்தில் கடலில் படகு மூலம் மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். குஜராத் அருகே அரபிக்கடலில் சர்வதேச கடல் எல்லைக் கோடு அருகே சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம் போர்பந்தரின் ஓகா கடற்கரையிலிருந்து அக்டோபர் 25-ம் தேதி 'ஜல்பாரி' என்ற மீன்பிடி படகில் 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர். சனிக்கிழமை மாலை 4 மணியவில் இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு முகமை (பி.எம்.எஸ்.ஏ)(பாகிஸ்தான் கடற்படையினர்) அத்துமீறி தங்கள் நாட்டு எல்லைக்கு வந்து விட்டதாக கூறி இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் இறந்தார். இது தவிர மற்றோரு மீனவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மீனவருக்கு குஜராத் மாநிலம் ஓகாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் கடற்படை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான மீனவர் ஸ்ரீதர் ரமேஷ் சாம்ரே என்பது தெரியவந்தது. சாம்ரேவின் உடல் ஞாயிற்றுக்கிழமை ஓகா துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நவி பந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
''இந்த சம்பவத்தை நாங்கள் தீவிரமாக கவனித்துள்ளோம். இந்த விவகாரத்தை நாங்கள் பாகிஸ்தான் தரப்புடன் இராஜதந்திர ரீதியாக எடுத்துச் செல்ல உள்ளோம். இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது, மேலும் விவரங்கள் சரியான நேரத்தில் பகிரப்படும்'' என்று இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதே வேளையில் பாகிஸ்தான் கடற்படை இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்பகுதியில் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்தனர். அந்த படகில் இருந்தவர்களை திரும்பி செல்லும்படி எச்சரித்தோம். ஆனால் அவர்கள் அதற்கு செவிசாய்க்காததால், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறியுள்ளது.
அரேபிய கடலில் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் தெளிவான கடல் எல்லை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைந்து விட்டதாக கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களது படகுகளை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கையை பாகிஸ்தான் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை உள்பட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை.. முதல்வர் ஸ்டாலின்