சீனாவுக்கு செக்! மலேசியாவுடன் கை கோர்த்த இந்திய கடற்படை! இனி இந்திய பெருங்கடல் நமது கட்டுப்பாட்டில்!
டெல்லி: இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா-மலேசியா கடற்படையின் கூட்டு வலிமையை வெளிப்படுத்தும் விதமாக, இந்திய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் மலேசியாவுக்கு சென்றிருக்கின்றன. இது சர்வதேச அரசியலில் முக்கிய மூவாக பார்க்கப்படுகிறது.
இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தை மழுங்கடிக்கும் விதமாக சீனா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இலங்கை மற்றும் மாலத்தீவை கையில் போட்டுக்கொண்டதன் மூலம் இதனை சாத்தியப்படுத்த துடித்துக்கொண்டிருக்கிறது. இலங்கைக்கு இந்தியா இதுவரை ஏராளமான உதவிகளை செய்திருக்கிறது. இருப்பினும், சீன ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து இலங்கை இன்னும் வெளியே வரவில்லை.

அதேபோலதான் மாலத்தீவும். இந்த தீவில் சமீபத்தில்தான் அதிபர் தேர்தல் நடந்தது. அதற்கு முன்னர் வரை இங்கு இந்திய ஆதரவு அதிபர்தான் இருந்தார். ஆனால் இந்த தேர்தலில் சீன ஆதரவாளரான முகமது முய்ஜு புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பதவியேற்றவுடன் பிறப்பித்த உத்தரவு, இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
அதாவது, மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், டோர்னியர் 228 கடல் ரோந்து விமானம் மற்றும் இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனை பராமரிக்கவும், இயக்கவும் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவ சுமார் 90 இந்திய ராணுவ வீரர்கள் அங்கு இருந்தது வந்தனர். ஆனால் இவர்கள் நீண்ட காலமாக மாலத்தீவில் இருப்பது, தங்களது இறையாண்மையை பாதிப்பதாக கூறி வீரர்கள் அனைவரையும் வெளியேற்ற அந்நாட்டு அதிபர் முகமது முய்ஜு உத்தரவிட்டார்.
தற்போது மாலத்தீவிலிருந்து அனைத்து இந்திய வீரர்களும் வெளியேறியுள்ளனர். இப்படி இருக்கையில்தான் மலேசியாவுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல் 2 சென்றிருக்கிறது. நட்பு ரீதியாக இந்தியாவும், மலேசியாவை சேர்ந்த கடற்படையும் சந்தித்துக்கொள்வதும், போர் குறித்த பயிற்சிகளை மேற்கொள்வதும் வழக்கம். இதனை செயல்பாட்டு வரிசைப்படுத்துதல் என்று கூறுவார்கள்.
அந்த வகையில் இன்று இந்தியாவிலிருந்து 'டெல்லி' மற்றும் 'சக்தி' என இரண்டு பெரிய போர்க்கப்பல்கள் மலேசியாவின் கோட்டா கினாபாலுவுக்கு சென்றுள்ளன. மலேசியாவின் ராயல் நேவி இந்திய போர்க்கப்பல்களுக்கு சிறப்பான வரவேற்பளித்திருக்கிறது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், "இந்த நிகழ்வு என்பது இரு நாட்டு உறவுகளையும் மேம்படுத்தும். இரு நாட்டு வீரர்களும் பரஸ்பரம் பழகி, பல்வேறு யுக்திகளை பகிர்ந்துக்கொள்வார்கள். இந்த பயணத்தின் இறுதியில் இரு நாட்டு போர்க்கப்பல்களும் கடல்சார் கூட்டாண்மை பயிற்சியில் ஈடுபடும். இது இரு நாடுகளுக்கும் இடையேயான ஒற்றுமையை வலுப்படுத்தும்" என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் டெல்லி கடற்படை கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. அதேபோல சக்தி கப்பல், விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு ஆதரவாக செயல்படும்.
இந்தியா மற்றும் மலேசியாவின் இந்த நடவடிக்கைள் சர்வதேச அளவில் உண்ணிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சீனாவால் கவனிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications