ராசி பார்த்தவர்கள் கணக்கை தவிடுபொடியாக்கிய உழைப்பு.. தன்னையே செதுக்கிக் கொண்ட ராகுல் காந்தி
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது 54 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 2019இல் மாபெரும் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சியை 2024இல் தனது பாரத் ஜோடோ யாத்ரா மூலம் மீட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவைத்துள்ளார். இவரது பயணத்தை இந்தச் சிறப்பான தருணத்தில் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம்.
இந்திய அரசியல் களத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ராகுல் காந்தி ஒரு ராசி இல்லாத தலைவர். அப்படித்தான் அவரை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வந்தனர்.

2009 இல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் மொத்தம் 543 தொகுதிகளில் 206 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு முன்பாக 1999 முதல் 2004 வரையிலான லோக் சபா தேர்தல்களில் முதல்முறை 114 இடங்களையும் அடுத்த முறை 145 இடங்களையும் கைப்பற்றி இருந்தது.
1999இல் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சிக்கு மறு உயிர் கொடுப்பதற்காக அரசியல் களத்தில் குதித்தார். பிரதமர் ஆகும் அளவுக்கு வாய்ப்பு இவரைத் தேடி வந்த போது 'இத்தாலியைச் சேர்ந்தவர் இந்தியாவை ஆள்வதா' என்று பாஜக தொடங்கி வைத்த கலகத்தில் ஜெயலலிதாவும் போய் இணைந்தார்.
எனவே பிரதமராகும் வாய்ப்பு சோனியாவுக்கு ஒரு எட்டாக்கனியாக மாறியது. ஆனால், அரசியல் தெளிவுடன் அவர் மன்மோகன் சிங்கை ஆட்சிக்குத் தலைமை தாங்க வைத்தார். சோனியா அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிக் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து அமேதி தேர்தல் களத்தில் களமிறங்கியதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தார் ராகுல் காந்தி. அப்போது அவர் 35 வயது கூட நிரம்பாத இளைஞர்.
அதன்பிறகு அவர் பல்வேறு கூட்டங்கள், கலந்துரையாடல்கள் என இந்தியா முழுவதும் பயணித்து அரசியல் அரிச்சுவடியைக் கற்றார். அதன் பரிசாக 2007இல் அவருக்கு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற 2013இல் காங்கிரஸ் கட்சிக்குத் துணைத்தலைவரானார்.
இந்நிலையில்தான் 2014இல் இந்தியாவின் பிரதமராக பாஜக மோடியை முன்னிறுத்தியது. அப்போது மன்மோகன் சிங் கட்சியை வழிநடத்தும் அளவுக்கு வலிமையாக இல்லை. ஆகவே, நேரடியாக இல்லை என்றாலும் கட்சியின் அடையாளமாக ராகுல் முன்வைக்கப்பட்டார்.
ஆனால், 'குஜராத் மாடல்' என்ற முழக்கத்திற்கு முன்பாக காங்கிரஸ் ஒன்று இல்லாமல் போனது. அதாவது 2014இல் வெறும் 44 தொகுதிகளில் தான் காங்கிரஸ் கட்சியால் தனது வெற்றிக் கொடியைப் பறக்கவிட முடிந்தது.
இதனிடையே ராகுல் 2017இல் இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக அமர்த்தப்பட்டார். இந்நிலையில் 2019இல் மீண்டும் நாடு லோக் சபா தேர்தலுக்குத் தயாரானது.
அப்போது 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்பது மோடியின் பிரச்சார முழக்கமாக முன்வைக்கப்பட்டது. அப்போது நாடு முழுவதும் வீசிய மோடி அலையில் 52 தொகுதிகளுக்குள் தனது வெற்றியைச் சுருக்கிக் கொண்டது காங்கிரஸ். இந்தி பேசும் உபி, பீகாரில் கட்சி காணாமல் போனது.

2019இல் ராகுல் உபியை இனி நம்பினால் அவ்வளவுதான் என நினைக்கும் அளவுக்கும் நிலைமை மோசமானது. ஆகவே, அவர் ஒரே நேரத்தில் அமேதியிலும் வயநாடு தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்தார்.
இதன் மூலம் ஒரு தேசிய கட்சியின் தலைவரான ராகுல் காந்தி தென் இந்தியாவை நம்பி கேரளாவுக்கு வந்தார். அவர் நினைத்ததைப்போலவே அமேதியில் ராகுல் தோல்வியைத் தழுவினார். அது அவர் தலைவர் பதவிக்கே உலைவைத்தது. கட்சியின் கடுமையான தோல்விக்குப் பொறுப்பேற்று அவர் காங் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும், நாடாளுமன்றத்தில் மோடியை எதிர்க்கும் வலுவான உறுப்பினராகச் செயல்பட்டார். மோடியுடன் வாதிடும் அளவுக்கு கடும் நெருக்கடியைத் தரும் தலைவராக வலம் வந்தார் ராகுல்.
அப்போதுதான் 2022இல் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இதே ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி 2023 ஜனவரி வரை பாரத் ஜோடோ யாத்ராவை கன்னியாகுமரியில் தொடங்கினார். அதற்குக் காரணம் 2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்திருந்ததுதான்.
அதைவைத்தே 'தமிழ்நாட்டில் உங்களால் ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியாது' என்று மோடிக்கு சவால் விடுத்தார் ராகுல். அதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள மக்களின் மனங்களைக் கவர்ந்தார் ராகுல். இதற்கு உறுதுணையாகக் கன்னியாகுமரி டு காஷ்மீர் வரையான யாத்திரை அவருக்கு கை கொடுத்தது.
அதன் தொடர்ச்சியாக 2024 ஜனவரியில் பாரத் ஜோடோ நியாய யாத்ராவை அவர் மணிப்பூரில் தொடங்கி மும்பையில் முடித்தார். இந்த யாத்திரையால் மீண்டும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்தது. 2019இல் அமேதியில் தோல்வியைத் தழுவிய ராகுல், 2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி எனப் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடினார்.
2014இல் 44 தொகுதிகளுக்குச் சுருண்ட கட்சியை இன்று 99 தொகுதிகளில் வெற்றி பெற வைத்து இந்திய நாடாளுமன்றத்தில் 2ஆவது மிகப்பெரிய கட்சியாக அழைத்து வந்து அமரவைத்துள்ளார். அத்துடன் இழந்த உபி மாநிலத்தைக் கட்சிக்கு மீண்டும் மீட்டுக் கொடுத்துள்ளார். இன்று அமேதியும் ரேபரேலியும் காங்கிரஸ் கைவசம் உள்ளது. அது வெறும் தொகுதிகளின் பெயர் அல்ல. அது காங்கிரஸ் பாரம்பரியத்தின் அடையாளம்!












Click it and Unblock the Notifications