கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்... முன்னாள் பாஜக எம்.பி. கடிதம்
டெல்லி: முன்னாள் ஜனாதிபதி அமரர் அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு பாஜக முன்னாள் எம்.பி. ஆனந்த் பாஸ்கர் ரபோலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி பிறந்தார். இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பணியாற்றிய, விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் 2015-ம் ஆண்டு ஜூலை 27ந் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

இதனை தொடர்ந்து அப்துல் கலாம் பிறந்தநாளான அக்டோபர் 15-ந் தேதியை உலக மாணவர் தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் என ஐநா அறிவித்தது. இந்நிலையில், அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாகவும் அறிவிக்க வேண்டுமென பாஜக முன்னாள் எம்.பி. ஆனந்த் பாஸ்கர் ரபோலு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதே கோரிக்கை முன்வைத்து, தமிழக எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த், 2015 ல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், மதச்சார்பற்ற, அறிவியலில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி காட்டிய அணு விஞ்ஞானி, பாரத ரத்னா ஏ.பி.ஜே அப்துல் கலாம், குடியரசுத்தலைவராக திகழ்ந்து உலக மக்களுக்கு புதிய அர்த்தத்தை வழங்கியுள்ளதாக தெரிவிததிருந்தார்.
மேலும், தமது வாழ்வை மாணவர்களுக்காக அர்ப்பணித்த ஒப்பற்ற தலைவர் அப்துல் கலாமின் பிறந்த தினத்தை தேசிய மாணவர்கள் தினமாக அறிவிக்க இளைஞர்கள் விரும்புவதாகவும், தமது கோரிக்கையை மோடி தலைமையிலான மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்று நம்புவதாகவும் விஜயகாந்த் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"கனவு காணுங்கள்" என்கிற ஒற்றை வார்த்தையின்மூலம் உலகையே திரும்பிபார்க்க வைத்தவர். இந்திய நாட்டு மக்கள் வறுமையின்றி வாழ வேண்டும் என்று கனவு கண்டார். ஒவ்வொரு இந்தியனையும் நாடு முன்னேறுவதற்கு ஆக்கப்பூர்வமான செயல்களை உருவாக்க கனவு காணச்செய்தார்.
இந்த உலகில் பலர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து விடுகிறார்கள். இவர்களில் பலரை அவர்கள் குடும்பமே மறந்துவிடுகிறது. ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த சாதனையாளர்களை இந்த உலகம் மறப்பதே இல்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அப்துல்கலாம் என்றால் மிகையாகாது.












Click it and Unblock the Notifications