ஆந்திரா, பீகாருக்கு அள்ளிக் கொடுத்த மத்திய பட்ஜெட்..அப்புறம் கேக் வெட்டி கொண்டாடாமல் என்ன செய்வாங்க?
டெல்லி: ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு மட்டும் மத்திய பட்ஜெட்டில் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை மத்திய பட்ஜெட்டில் புறக்கணித்திருப்பதும் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநில எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டம் நடத்திய நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த பாஜக எம்பிக்கள், ரூ15,000 கோடி சிறப்பு நிதி உதவியை அறிவித்த மத்திய பட்ஜெட்டைப் பாராட்டும் வகையில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.
லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பாஜகவின் பட்ஜெட்டாக இல்லாமல் வேறு ஒரு கோணத்தில் குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், தொழில்துறையினரை இலக்கு வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருந்தது.

இன்னொரு பக்கம் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உறுதுணையாக ஆதரவு தந்த ஆந்திராவின் தெலுங்குதேசம், பீகாரின் ஜேடியூ கட்சிகளைத் திருப்திப்படுத்த இந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் பெருமளவு நிதியையும் திட்டங்களையும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய பட்ஜெட்டில், ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்படி, அம்மாநிலத்தின் புதிய தலைநகரை உருவாக்க நடப்பு நிதியாண்டில் சிறப்பு நிதியுதவியாக பல்வேறு மேம்பாட்டு முகமைகள் மூலம் ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும். விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை வழித்தடத்தில் கோப்பர்த்தியில் தொழில்முனையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல பீகாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், விளையாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படும்.
பீகாரில் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.26,000 கோடி ஒதுக்கப்படும்.
பீகாரில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 11,500 கோடி ரூபாய் நிதியுதவி. பீகார் மற்றும் அசாம் மாநிலத்திற்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக பட்ஜெட்டில் தொகுப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இப்படி மத்திய பட்ஜெட்டில் நிதி மற்றும் திட்டங்களை அறிவித்த மத்திய அரசுக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களின் எம்பிக்கள் மத்திய பட்ஜெட்டின் புறக்கணிப்புக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டங்களையும் நடத்தினர்.

அதே நேரத்தில் ஆந்திராவின் பாஜக எம்பிக்களான புரந்தரேஸ்வரி, சிஎம் ரமேஷ், பூபதி ராஜூ சீனிவாச வர்மா ஆகியோர் டெல்லியில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விமர்சனங்களுடன் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications