டெல்லியில் முகாமிட்டுள்ள அண்ணாமலை! உள்ளே வரும் ஓபிஎஸ் & டிடிவி? தேர்தல் களத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்
டெல்லி: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அண்ணாமலை இப்போது டெல்லிக்குச் சென்றுள்ள நிலையில், தமிழக அரசியல் சூழல் தொடர்பாக அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் சில மாதங்களில் நடைபெறுகிறது. இப்போதே எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்துவிட்டது. பிரச்சாரம் மற்றும் கூட்டணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.

அண்ணாமலை
இதற்கிடையே தேர்தலுக்கு முன்பே என்டிஏ கூட்டணியை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் உள்ளே கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கான காய்களை அண்ணாமலை நகர்த்தி வருகிறார்.
ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவருமே முன்பு என்டிஏ கூட்டணியில் தான் இருந்தார்கள். ஆனால், அதிமுக- பாஜக கூட்டணி அமைந்த பிறகு இருவருமே கூட்டணியில் இருந்து விலகினர். இருப்பினும், அவர்களை உள்ளே கொண்டு வந்தால் தான் அதிமுக வாக்கு வாங்கி முழுமையாகக் கிடைக்கும் என்பதால் அவர்களைச் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டது.
டெல்லி பயணம்
முதலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் டெல்லிக்குப் போனார். அங்கு அவர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவர் தமிழகம் திரும்பிய மறுநாளே அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டார். அவரும் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு தமிழகம் திரும்பிய அண்ணாமலை, கடந்த 7ம் தேதி ஓபிஎஸை தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு டிடிவி தினகரன்- அண்ணாமலை சந்திப்பும் நடைபெற்றது. அண்ணாமலை வீட்டிலேயே டிடிவி தினகரனுக்கு இரவு விருந்து தரப்பட்டது. அதைத் தொடர்ந்தே ஓபிஎஸ் மற்றும் டிடிவியை என்டிஏ கூட்டணிக்குள் மீண்டும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை
அவர்களை அதிமுகவில் இணைப்பதே முதலில் திட்டமாக இருந்தது. இருப்பினும், இதற்கு எடப்பாடி பழனிசாமி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். என்ன நடந்தாலும் இவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது. அதேநேரம் அவர்கள் தனியாகக் கட்சியை ஆரம்பித்து, அதை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வந்தால் அதில் பிரச்சினை இல்லை என்று எடப்பாடி கூறியதாகச் சொல்லப்படுகிறது.
அடுத்து என்ன
அதைத் தொடர்ந்து மீண்டும் நேற்று முன்தினம் இரவு அண்ணாமலை டெல்லிக்குப் போனார். SIR தொடர்பாக பாஜக சார்பில் நடத்தப்படும் கூட்டத்தில் கலந்து கொள்ளவே டெல்லி போவதாக அண்ணாமலை கூறியிருந்தார். இருப்பினும், அவர் நேற்றைய தினம் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்ததாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அப்போது ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இன்று அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்தே யாரெல்லாம் அதிமுகவில் நேரடியாக மீண்டும் இணைகிறார்கள்.. யாரெல்லாம் என்டிஏ கூட்டணிக்குள் வருகிறார்கள் என்பது தெரிய வரும். இதனால் அடுத்த சில நாட்களுக்குத் தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு நிகழ்வுகள் ஏற்படுவது உறுதி!












Click it and Unblock the Notifications