அமைச்சரவையில் பங்கேற்பா? தகவலை மறுத்த அண்ணாமலை.. தமிழ்நாட்டில் பணிகளை தொடர உள்ளதாக பேட்டி!
டெல்லி: அண்ணாமலை மத்திய அமைச்சராகப் போவதாக தகவல்கள் தீவிரமாக உலவி வந்த நிலையில், அவர் பாஜக மாநில தலைவராகவே தொடர்வார் என லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்திலும் அண்ணாமலை பங்கேற்கவில்லை.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து, நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இன்று மாலை 7.15 மணிக்கு டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

பிரதமர் மோடி உடன் கேபினட் அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தீவிரமாக பேசப்பட்டு வந்தது. மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டால், மாநில தலைவர் பதவியில் இருந்து அவர் மாற்றப்படுவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற முதல் தமிழகத்தில் செல்வாக்கு சற்று வளர்ந்து வருவதாகவும், 2026 சட்டசபை தேர்தல் வரை அவர் தொடர வேண்டும் என்று இங்கிருந்து ரிப்போர்ட் டெல்லி தலைமைக்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலையும், அதையே விரும்புவதாகத் தெரிகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன்பே, தனக்கு டெல்லி அரசியலில் விருப்பம் இல்லை என்றும், 2026 தேர்தல் தான் இலக்கு என்றும் கூறி இருந்தார். எனினும், எதிர்பாராத விதமாக கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கோவை லோக்சபா தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்து தோல்வி அடைந்தார் அண்ணாமலை.

இந்நிலையில் தான், அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டு, அதன் பிறகு ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் பரவின. எனினும், மாநிலத்தில் கட்சியை நல்ல நிலைமைக்கு கொண்டு வர அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு தேவை தேசிய பாஜக தலைவர்களும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராகவே தொடர்வார். அவர் மத்திய அமைச்சராக மாட்டார் என்றும் ஏற்கனவே மத்திய இணை அமைச்சராக இருந்த எல். முருகன் மட்டுமே மோடியின் 3வது அமைச்சரவையிலும் மத்திய இணை அமைச்சராக இருக்கிறார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை உறுதி செய்யும் வகையில் இன்று டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் டீ பார்ட்டியில் தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன் மட்டுமே பங்கேற்றார். முன்பே அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். ஆக, தமிழ்நாடு பாஜகவில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்வார் எனத் தெரிகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சராக நியமிக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார். தனியார் செய்தி ஊடகத்துக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் பணிகளை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications