டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்?
டெல்லி: முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலையின் அரசியல் தொடர்பாக டெல்லியில் தொடரும் அரசியல் நாடகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜூன் 2-ம் தேதி டெல்லி புறப்பட்ட அண்ணாமலை, தனது ராஜினாமா கடிதத்துடன் ஐந்து பக்கங்கள் கொண்ட தேர்தல் பின்னடைவு குறித்த விரிவான ஆய்வறிக்கையையும் பா.ஜ.க மேலிடத்திடம் சமர்ப்பித்தார்.
ஆனால், கட்சித் தலைமை அவரை உடனடியாக சென்னை திரும்ப அனுமதிக்காமல் டெல்லியிலேயே தங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று நாட்களாக மாரத்தான் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

அண்ணாமலை அமித் ஷா, நிதின் நபீன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து தனது அதிருப்தியை தெளிவாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கையாண்ட வியூகம் மற்றும் அ.தி.மு.கவுடனான கூட்டணி மறுமலர்ச்சி ஆகியவற்றில் அவர் கடும் அதிருப்தி அடைந்திருந்தார். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டதும் அவருக்கும் கட்சிக்கும் இடையேயான இடைவெளியை அதிகரித்தது.
டெல்லி சந்திப்புகளின்போது அண்ணாமலை, "தேசியக் கட்சிகளின் நிழலில் இல்லாமல், தமிழகத்தில் தனித்துவமான மாற்று அரசியல் சக்தியை உருவாக்க வேண்டும்" என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். "தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க இதுவே சரியான தருணம்" என அவர் உறுதியாகக் கூறியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ.க தரப்பில் அமித் ஷா, பி.எல். சந்தோஷ் உள்ளிட்டோர் அண்ணாமலையை சமாதானப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு அல்லது மாநில அளவில் அதிக சுய அதிகாரத்துடன் கூடிய பதவியை வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பா.ஜ.க-வின் இரட்டை வியூகம்
இந்த விவகாரத்தில் பா.ஜ.க தலைமை ஒரு சிக்கலான இரட்டை மனநிலையில் (Dilemma) இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஒருபுறம், இளைஞர்களை ஈர்க்கும் துடிப்பான தலைவரான அண்ணாமலையை இழக்க விரும்பாத கட்சி, அவரைத் தக்கவைக்க கடைசி வரை முயற்சி செய்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது ஆக்ரோஷமான பிரச்சாரம் பா.ஜ.க-வின் வாக்கு சதவீதத்தை 11 சதவீதமாக உயர்த்த உதவியதை மேலிடம் நினைவில் வைத்துள்ளது.
மறுபுறம், அண்ணாமலை மதச்சார்பற்ற முற்போக்கு அணுகுமுறையில் ஒரு புதிய பிராந்தியக் கட்சியைத் தொடங்கினால், அது தங்களுக்கும் சாதகமாக அமையும் என பா.ஜ.க-வில் சிலர் கணக்கு போடுகின்றனர். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அவரது புதிய இயக்கம் உருவானால், தி.மு.க - அ.தி.மு.க இரு துருவ அரசியலை பலவீனப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஏற்படுத்திய தாக்கம், திராவிட அரசியலுக்கு அப்பால் புதிய தலைமுறை வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருப்பதை நிரூபித்துள்ளது. இந்த வெற்றிடத்தை அண்ணாமலை நிரப்பினால், பா.ஜ.க-வுக்கு மறைமுக பலன் கிடைக்கும் என டெல்லி உத்தியோகஸ்தர்கள் நம்புகின்றனர்.
ஜூன் 5-ல் முக்கிய அறிவிப்பு?
தற்போது டெல்லியிலேயே தங்கியிருக்கும் அண்ணாமலை, மேலிடத்தின் சமாதான முயற்சிகளுக்கு இன்னும் இறுதி முடிவு எதுவும் தெரிவிக்கவில்லை. ஜூன் 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அவர் ஒரு முக்கிய செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பில் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் களம் முழுவதும் தற்போது டெல்லியை நோக்கி திரும்பியுள்ளது. அண்ணாமலையின் முடிவு தமிழக அரசியல் சமன்பாட்டை மாற்றக்கூடிய ஒன்றாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வரும் வரை, தமிழக அரசியல் வட்டாரங்கள் பெரும் பரபரப்பில் உள்ளன. அண்ணாமலை பா.ஜ.க-வில் தங்குகிறாரா? அல்லது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்குகிறாரா? என்பதை ஜூன் 5 தீர்மானிக்கும்.












Click it and Unblock the Notifications