பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும்.. இதை தவிர்க்கவே முடியாது.. BPCL முன்னாள் இயக்குனர் எச்சரிக்கை
டெல்லி: மேற்காசியாவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் போர்ச் சூழல் காரணமாக, உலக அளவில் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சர்வதேச நெருக்கடி நீடித்தால், இந்திய சந்தையில் சில்லறை எரிபொருள் விலையை மேலும் உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தின் முன்னாள் மனிதவள இயக்குனர் ராஜ் குமார் துபே தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, கடந்த மே 15 முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தத் தொடங்கின. கடந்த 10 நாட்களில் மட்டும் லிட்டருக்கு சுமார் ரூபாய் 5 வரை விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போதைய உலகளாவிய சூழல் இந்த விலை உயர்வு இன்னும் தொடரும் என்பதையே காட்டுகிறது.

இருக்கும் 3 வாய்ப்புகள்
தற்போது கச்சா எண்ணெய் சந்தையில் நிலவும் கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க, அரசாங்கத்திற்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் முன்பு மூன்று வழிகள் மட்டுமே உள்ளதாக ராஜ் குமார் துபே குறிப்பிட்டுள்ளார்:
சாய்ஸ் 1: சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல் பம்புகளில் சில்லறை விலையை (Retail Price) மேலும் உயர்த்துவது.
சாய்ஸ் 2: விலை உயர்வைத் தவிர்த்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே (OMCs) நஷ்டத்தைத் தங்களது தலையில் சுமப்பது.
சாய்ஸ் 3: அரசாங்கம் தனது நிதியப் பற்றாக்குறையை (Deficit Financing) அதிகரித்துக் கொண்டு, மானியங்கள் மூலம் இந்த நஷ்டத்தை ஈடுகட்டுவது.
"உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 20% முதல் 50% வரை உயர்ந்தபோது, அது தற்காலிகமானது என்றுதான் ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது இந்த விலையேற்றம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் என்றே தோன்றுகிறது. எனவே, சில்லறை விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாதது" என்று அவர் விளக்கியுள்ளார்.
இந்தியாவின் சாமர்த்தியம்
ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்துத் தடையால் சர்வதேச அளவில் 2 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமான எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா தனது சாதுரியமான ராஜதந்திர நடவடிக்கைகளால் பெரிய தட்டுப்பாடு இன்றி தப்பித்துள்ளது.
இதுகுறித்து துபே கூறுகையில், "முன்பெல்லாம் இந்தியா வெறும் 20 சப்ளை பாயிண்ட்டுகளில் இருந்து மட்டுமே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. ஆனால், இப்போது ரஷ்யா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட 40 சப்ளை பாயிண்ட்டுகளாக அதை விரிவுபடுத்தியுள்ளோம். இந்த விநியோகப் பல்வகைப்படுத்தல் நமக்கு எரிசக்தி பாதுகாப்பை வழங்கியுள்ளது" என்றார். போருக்குப் பிறகும் இந்தியாவில் எரிபொருள் நுகர்வு அதிகரித்துள்ள போதிலும், எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் நிலைமை சீராகக் கையாளப்பட்டு வருகிறது.
பசுமை ஆற்றலுக்கு மாறும் வேகம் அதிகரிக்கும்
இந்த எரிசக்தி நெருக்கடி, இந்தியா தூய்மையான பசுமை ஆற்றலை நோக்கி மாறுவதை மேலும் வேகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் 200 ஜிகா வாட்டிற்கும் அதிகமான சூரிய ஒளி மின்சாரம் நிறுவப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியால் ஏற்படும் அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, இயற்கை எரிவாயு பயன்பாட்டை 15%-ஆக உயர்த்துவது, 20% எத்தனால் கலப்புத் திட்டம் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிப்பு போன்ற திட்டங்களை மத்திய அரசு தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. இந்த மாற்று எரிசக்தி முயற்சிகள் மட்டுமே எதிர்காலத்தில் இந்தியாவின் நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications