18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட நாங்கள் தயார் - அப்பல்லோ, மேக்ஸ், ஃபோர்டிஸ் அறிவிப்பு
தனியார் மருத்துவமனைகளான அப்பல்லோ, மேக்ஸ் மற்றும் ஃபோர்டிஸ் மே 1 முதல் 18 முதல் 44 வரை உள்ளவர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ளது
டெல்லி: தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ள நிலையில் அப்பல்லோ, மேக்ஸ் மற்றும் ஃபோர்டிஸ் தனியார் மருத்துவமனைகள் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசியை அரசு இலவசமாக செலுத்தும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து போட வேண்டும்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தினசரியும் 4 லட்சம் பேர் பாதித்து வருகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டது.

60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டன. 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கடந்த 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் அதற்காக முன்பதிவு செய்யலாம் என அரசு அறிவித்தது. இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் கோவின் இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் வருகிற மே 1ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என அறிவித்தது. இதனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசிகளை போட்டு கொள்ள முடியும். எனினும், நாட்டில் தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
45 வயதிற்கு மேற்பட்டோருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. தவிர மத்திய அரசிடம் கேட்டுள்ள தடுப்பூசி மருந்துகள் இன்னமும் மத்திய அரசிடம் இருந்து பல மாநிலங்களுக்கு வரவில்லை என்பதால் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் ஒத்தி வைத்துள்ளன.
அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைகளான அப்பல்லோ, மேக்ஸ் மற்றும் ஃபோர்டிஸ் மே 1 முதல் 18 முதல் 44 வரை உள்ளவர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும். இந்த தடுப்பூசிகளை நாட்டின் வரையறுக்கப்பட்ட மையங்களில் தொடங்கப்போவதாக அப்பல்லோ தெரிவித்துள்ளது.
தடுப்பூசி திட்டம் குறைந்த அளவுகளில் தொடங்கி, அடுத்த வாரங்களில் அதிகரிக்கப்படும். அப்பல்லோ மருத்துவமனைகளும் நிறுவனங்களுக்கு சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யும் என்று அப்பல்லோ மருத்துவமனை குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கோவிஷீல் தடுப்பூசிகளை பயன்படுத்தும் என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மேக்ஸ் மருத்துவமனைகளும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசிகளை செலுத்த தயாராகி வருவதாகக் தெரிவித்துள்ளது.
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனமும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளதாக கூறியுள்ளது. இது கோவாக்சின் தடுப்பூசிகளை செலுத்தும். ஒரு டோஸுக்கு ரூ. 1250 கட்டணமாக பெறப்படும் என கூறியுள்ளது. இது தடுப்பூசி மற்றும் நிர்வாகக் கட்டணங்களை உள்ளடக்கியது.
ஜனவரி மாதம் தொடங்கிய நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் சமீபத்திய கட்டத்தில், மாநிலங்களும் தனியார் நிறுவனங்களும் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக அளவுகளை வாங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது தடுப்பூசி தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிக்கும் மருந்துகளில் 50 சதவிகிதத்தை மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள், மீதமுள்ளவற்றை தற்போதுள்ள கட்டணத்தில் மத்திய அரசுக்கு வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசுக்கு ஒரு டோஸ் 150 ரூபாய்க்கு கோவிஷீல்ட் மருந்தினை சீரம் நிறுவனம் வழங்குகிறது. மாநிலங்களுக்கு சீரம் நிறுவனம் ஒரு டோஸ் ரூ. 400 ஆக விலையை உயர்த்தியது. அதைப்பார்த்து பாரத் பயோடெக் கோவாக்சின் மருந்தை மாநிலங்களுக்கு ரூ. 600 ஆக விலையையும் நிர்ணயித்தது. இரு நிறுவனங்களும் பின்னர் மாநில அரசாங்கங்களுக்கான விலைகளை சீரம் 300 ரூபாயாகவும், பாரத் பயோடெக் ஒரு டோஸுக்கு 400 ரூபாயாகவும் குறைத்தது.
தனியார் மருத்துவமனைகள் பாரத் பயோடெக்கிலிருந்து ஒரு டோஸ் ரூ.1200 வரையிலும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிலிருந்து ரூ. 600 வரையிலும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications