"மத்திய அரசு சொல்வதை கேட்க முடியாது!" சஞ்சார் சாத்தி செயலி விவகாரத்தில் ஆப்பிள் எடுத்த முடிவு
டெல்லி: இந்தியாவில் எல்லா ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி என்ற செல்போனை நிறுவ மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், இதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இந்தச் செயலி கட்டாயமில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்தது. இதற்கிடையே மத்திய அரசு இந்த உத்தரவைப் பின்பற்றப் போவதில்லை என ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சைபர் பாதுகாப்பு பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், இதனால் அப்பாவி பொதுமக்கள் பலரும் பெரிய தொகையை இழந்து வருகிறார்கள். இதைத் தடுக்க மத்திய அரசு சஞ்சார் சாத்தி என்ற செயலியை எல்லா மொபைல்களிலும் நிறுவ உத்தரவிட்டிருந்த நிலையில், ஆப்பிள் இதற்கு முதல் நிறுவனமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சஞ்சார் சாத்தி
அதாவது ஸ்மார்ட்போன்களில் சஞ்சார் சாத்தி செயலியைக் கட்டாயம் preloadஆக இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், இதற்கு இணங்க ஆப்பிள் நிறுவனம் மறுக்கும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகத் தனது கவலைகளை மத்திய அரசிடம் தெரிவிக்கவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் கண்காணிப்பு குறித்த அச்சங்களை எழுப்பியுள்ளது.
ஆப்பிள், சாம்சங், சியோமி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இதற்கு 90 நாட்கள் காலவகாசம் தரப்பட்டுள்ளது. அதற்குள் 'சஞ்சார் சாத்தி' (Communication Partner) எனும் செயலியை நிறுவ வேண்டும் என உத்தரவிட்டது. திருடப்பட்ட செல்போன்களை கண்காணிக்கவும், தடுக்கவும், தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும் இந்தச் செயலி உதவும் என மத்திய அரசு கூறியது. மேலும், என்ன ஆனாலும் இந்த செயலி அன்இன்ஸ்டால் செய்ய முடியாத வகையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
மத்திய அரசு
புதிய செல்போன்களில் இந்தச் செயலி preinstalledஆக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதாவது வாங்கும் போதே இந்தச் செயலி இருக்க வேண்டுமாம். மறுபுறம், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் செல்போன்களுக்கு சாப்ட்வேர் அப்டேட் மூலம் இந்தச் செயலியைக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மத்திய அரசு இதைப் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் செல்போன் நிறுவனங்களுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதேநேரம் ராய்டர்ஸில் இந்த செய்தி வெளியான பிறகே, இதை மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
அதேநேரம் இந்த உத்தரவுக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் உளவு செயலியான பெகாசஸ் உடன் ஒப்பிட்டும் இதை எதிர்க்கட்சிகள் சாடி வருகிறார்கள். இது பிரைவசிக்கு எதிரான ஒன்று என்றும் விமர்சித்துள்ளனர். இந்தியாவிலுள்ள 730 மில்லியன் ஸ்மார்ட்போன்களை அரசு தனது கண்ட்ரோலில் கொண்டு வர முயல்வதாகச் சாடினர்.
ஆப்பிள்
இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தான், இந்த உத்தரவைப் பின்பற்ற வேண்டாம் என்று ஆப்பிள் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. உலக அளவில் எங்கும் இதுபோன்ற உத்தரவுகளை ஆப்பிள் செயல்படுத்தாது என்பதையும் அரசுக்கு தெரிவிக்கவுள்ளது. இதுபோன்ற செயலிகள் ஐபோன்களில் இருக்கும் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்குச் சிக்கல்களை உருவாக்குவதாக ஆப்பிள் கருதுகிறது.
இது தொடர்பாக விரைவில் மத்திய அரசை சந்தித்து ஆப்பிள் நிறுவனம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
என்ன முடிவு
ஆப்பிள் நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி கூறுகையில், "பாதுகாப்பு காரணங்களால் இந்த உத்தரவைப் பின்பற்ற முடியாது.. இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதில்லை. ஆனால், அரசிடம் இதைச் செய்ய முடியாது என்பதை மட்டும் சொல்லவுள்ளோம்" என்று அந்த அதிகாரி தெரிவித்தார். சாம்சங், சியோமி உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் இதில் என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications