நெருங்கும் தீபாவளி.. குரூப் பி, சி ஊழியர்களுக்கு ஜாக்பாட்! போனஸை அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி அரசின் குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்களுக்கு ரூ.7000 தீபாவளி போனஸாக வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் அரசு நிர்வாகத்தின் சிறப்பான பணிக்கு ஒத்துழைத்த அரசு ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில் டெல்லி அரசின் குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்களுக்கு ரூ.7000 தீபாவளி போனஸாக வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியிட்ட அவர் தீபாவளி வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.

இந்த வீடியோவில் அவர் பேசியதாவது, "டெல்லியில் கெஜட்டில் அல்லாத குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்கள் மொத்தம் 80 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7,000 வழங்கப்படும். இதற்காக ரூ.56 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆம் ஆத்மி அரசு அதன் ஊழியர்களை சிறப்பாக வைத்திருக்க எப்போதும் முயன்று வருகிறது. இந்த முயற்சிகள் எதிர்காலத்திலும் தொடரும்" என்று கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு டெல்லி அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் டெல்லியில் காற்று மாசு பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த காற்று மாசு கடும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகளுக்கு டெல்லி அரசு வரும் 10ம் தேதி வரை விடுமுறை அறிவித்திருக்கிறது. இது குறித்து கல்வித்துறை அமைச்சர் அதிஷி கூறுகையில், "தொடக்கப் பள்ளிகளுக்கான விடுமுறை நீடிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல கட்டிடப் பணிகள் மேற்கொள்ளவும், கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மோசமான வானிலை காரணமாக காற்று மாசு இதேபோல இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் டெல்லி மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர்.
காற்றின் வேகம் குறைவாக இருப்பதாலும், மழை இல்லாததாலும் டெல்லியில் உள்ள காற்று மாசு தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். காற்று மாசு காரணமாக சுமார் 2 கோடி மக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 50% பேரை வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்த பிரச்னையை எதிர்கொள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று மதியம் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications