கெஜ்ரிவால் கைது... பின்னால் பாஜக நன்கொடை பெற்ற நிறுவனம்? அவசரம் ஏன்? ரகசியம் என்ன?
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று இரவு அமலாக்கத்துறை கைது செய்தது.
ஏற்கெனவே டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட இரண்டு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜராகும்படி தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சார்பாகப் பலமுறை சம்மன்கள் அனுப்பப்பட்டு வந்தன. அவர் தேர்தல் காலம் நெருங்கும் தருணத்தில் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்றே கணிப்புகள் வெளியாகின.
இந்நிலையில்தான் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தை அரவிந்த் கெஜ்ரிவால் நாடியிருந்தார். ஆனால் கெஜ்ரிவாலின் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதனை அடுத்துத்தான் அதிரடியாக அவர் கைது செய்யப் பட்டார்.
கெஜ்ரிவால் கைதை கண்டித்து இன்று 'இந்தியா’ கூட்டணி சார்பில் திமுக போராட்டம் நடத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலினும் இந்தக் கைதை கண்டித்துள்ளார்.
கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஏஏபி கட்சியின் வழக்கறிஞர் வேல்முருகன், “இந்த ஊழல் புகாரில் எங்களுக்கு லட்சமாகக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப் படும் 100 கோடி ரூபாய். அதில் ஒத்த பைசாவைக் கூட அமலாக்கத்துறை கைப்பற்றவில்லை. அதற்கான பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்படவும் இல்லை. அப்படியான பண மோசடி குறித்து ஒரு ஆதாரம் கூட கைப்பற்றப்படவில்லை. இதுதான் இப்போதுவரை நிலைமை.
சரத் சந்திரா ரெட்டி என்பவர் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளார். அவரது சாட்சியத்தை வைத்தே வழக்கு வேகப்படுத்தப்பட்டுள்ளது. இவரது அரவிந்தோ ஃபார்மா கம்பெனி 55 கோடி ரூபாயை பாஜகவுக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக அளித்துள்ளது.

எங்களுக்கு 100 கோடி லட்சம் வழங்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டும் அமலாக்கத்துறை, பாஜகவுக்கு 55 கோடி ரூபாய் நன்கொடை அளித்தது பற்றி வாய் திறக்கவில்லை ஏன்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
கெஜ்ரிவால் கைது அராஜகமான அரசியல் நகர்வு என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், இந்தக் கைது ஏன் அவசர அவசரமாக நடந்துள்ளது? அதன் பின்னால் உள்ள ரகசியம் என்ன என்பதைப் போட்டு உடைத்துள்ளார்.
ஷ்யாம் பேசுகையில்,“அராஜகமான அரசியல் நகர்வு இது. இதன் பின்னணியில் பாஜக இருப்பது வெட்டவெளிச்சம். டெல்லியில் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. இந்தக் கைது மூலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கி உள்ளது பாஜக.
சொல்லப்போனால், ஆம் ஆத்மியும் காங்கிரசும் கூட்டணி அமைத்ததை பாஜக ரசிக்கவில்லை. இந்த வழக்கில் உண்மையில் கவலைப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், இந்த வழக்கானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் தான் இருக்கிறது,
டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகாமல் தடுப்பதற்காக முன் ஜாமின் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது அவ்வளவுதான். இது போகப் பண மோசடி தடுப்புச் சட்டம் என்பதே மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்த வேண்டும் என்பதே பல அரசியல் கட்சிகளில் கருத்தாகவும் இருக்கிறது.
ஒருவரை 4 வருடம் வரை கூட கைது செய்து உள்ளே வைக்கக் கூடிய சூழல் இந்தச் சட்டத்தால் ஏற்பட்டுள்ளது. இது ஒரு கவலை தரக் கூடிய விசயம். வேறு ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் கூட இந்தப் போன்று விசாரணை என்ற பெயரில் ஒருவரைச் சிறையில் வைத்திருப்பீர்கள் என்று கண்டித்திருக்கிறது.
அந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் அமலாக்கத்துறை விரைந்து முடிவு எடுக்கா விட்டால், உடனடியாக நீதிமன்றம் உரிய நபருக்கு ஜாமின் வழங்கி விடுவோம் என்றும் சொல்லி இருந்தது.
இந்த வழக்கை பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2018இல்தான் திருத்தியது. அந்தத் திருத்தத்திற்கு பிறகுதான் புதியதாகக் கைது சம்பந்தமான புதிய நடைமுறை சேர்க்கப்பட்டது. அதன்பின்னர் இப்படியான கைதுகள் தொடர்கின்றன. இப்படி கைது செய்வதன் மூலம் எதிரிகளை அடக்கிவிடலாம் அல்லது ஒடுக்கிவிடலாம் என்று பாஜக நினைக்கிறது.
இது பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ஏறக்குறைய எமர்ஜென்சி காலத்தைப் போல் உள்ளது.
இந்தக் கைது நடவடிக்கை இப்போது எடுக்கப்பட வேண்டியது அல்ல. வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஏன் இப்போது இதை உடனே செய்தார்கள் என்றால், பி.எம்.எல்.ஏ சட்டத்திருத்தம் சார்ந்த வழக்கு நடந்து வருகிறது.
அதில் சட்டப்பிரிவு 45 விதியை நீக்க வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அநேகமாக அந்த ஷரத்தை நீதிமன்றம் நீக்கி விடும் என்றே சொல்லப்படுகிறது.
அப்படி நீக்கிவிட்டால், கைது நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. அதை உணர்ந்து தான் உடனடியாக கெஜ்ரிவாலைக் கைது செய்துள்ளனர். இதற்குப் பின்னால் அரசியல் சதி இருக்கிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்குவதற்கு முன்பு தேர்தலே நடந்து முடிந்துவிடும். கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய முடியாது.
நாளைக்கு இதே நிலை பாஜகவுக்கும் வரலாம். அவர்கள் எதிர்க்கட்சியாக அமரக்கூடிய நிலை வரும் காலத்தில் இதைப்போன்று அவர்களும் சிறையிலடைக்கப்படலாம். இந்த முறை ஜனநாயகத்திற்கு எதிரானது.
அரவிந்த கெஜ்ரிவால் கைது டெல்லி பாஜகவை மட்டும் பாதிக்காது. நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான ஒரு அத்திருப்பதியை ஏற்படுத்தும். மக்கள் இதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தக்க பதிலடி தருவார்கள்” என்கிறார்












Click it and Unblock the Notifications