நெருங்குது தேர்தல்.. காலை சுற்றும் சிபிஐ விசாரணை.. அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த பிளான்கள் என்ன?
டெல்லி: புதிய மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு அழைத்திருக்கிறது சிபிஐ. கெஜ்ரிவால் நாளை விசாரணைக்காக ஆஜராகிரார்.
கடந்த 2021ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசில் கலால் துறை அமைச்சராக இருந்த மணீஷ் சியோடியா புதிய மதுபான கொள்ளையை அறிமுகப்படுத்தினார். இந்த கொள்கையின் படி டெல்லி 32 கலால் மண்டலமாக பிரிக்கப்பட்டது. அதேபோல 849 தனியார் மது விற்பனை நிறுவனங்களுக்கும், சில சில்லறை விற்பனையாளர்களுக்கும் மதுபானம் விற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் மதுபானம் விற்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக்கொண்டது.

மட்டுமல்லாது மதுபானம் விற்பனையாளர்களுக்கு சில சலுகைகளையும் அறிவித்தது. அதன்படி விற்பனையாளர்கள் எம்.ஆர்.பி விலையை பொருட்படுத்தாமல் தங்கள் விருப்பம் போல விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பண்டிகை நாட்களில் விலை அதிகமாகவும், மற்ற நாட்களில் விலை சாதாரணமாகவும் இருக்கும். இது ஒட்டுமொத்த லாபத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டது. மட்டுமல்லாது கள்ள சந்தையில் மதுபானங்கள் விற்கப்படுவது கட்டுப்படுத்தப்படும் என்றும், நுகர்வோரின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என்றும் சொல்லப்பட்டது.
எல்லாம் சரியாக சென்றுக்கொண்டிருக்கையில்தான் டெல்லி ஆளுநர் வினய்குமார் சக்சேனா அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அதாவது, கொரோனா தொற்று காலத்தின் நெருக்கடியை பயன்படுத்தி மது விற்பனையாளர்களுக்கு டெல்லி அரசு ஏராளமான சலுகைகள் வழங்கியுள்ளது. இதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதற்காக கோடிக்கணக்கில் பணம் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்பதுதான் சக்சேனா எழுப்பிய குற்றச்சாட்டு. 2021ம் ஆண்டு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டிருந்தாலும் சக்சேனா புகார் எழுப்பியது 2022ம் ஆண்டு தொடக்கத்தில்தான்.
இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் அப்போதுதான் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் டெல்லியின் ஆட்சியாளர்கள் மீது சிபிஐ விசாரணை வேண்டும் என்று சக்சேனா பஞ்சாயத்தை கூட்ட.. நாடு முழுவதும் தலைப்பு செய்தியாக இந்த விவகாரம் வெடித்து கிளம்பியது. இதனையடுத்து விசாரணையில் இறங்கிய சிபிஐ 9 தொழிலதிபர்கள், 2 மதுபான தொழில்சாலைகள் மீது வழக்குப்பதிவு செய்து ரெய்டை நடத்தியது.
ரெய்டில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையை அடிப்படையாக கொண்டு விரிவாக 2 குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ. அதில் டெல்லி துணை முதலமைச்சரும், கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, தெலங்கானா முதலமைச்சரின் மகள் கவிதா உள்ளிட்ட தலைவர்கள் என 36 பேர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. இதற்குள் பஞ்சாப் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. ஆம் ஆத்மி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.
இதன் பின்னர்தான் ஆட்டம் பரபரப்பானது. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி மணீஷ் சிசோடியா நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனையடுத்து சிசோடியா ஆஜரானார். சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் அவருடைய பதில்கள் திருப்திகரமாக இல்லை என்றும், ஆதாரங்களை காட்டி கேள்வியெழுப்பிய பின்னரும் அவர் உரிய பதில் கொடுக்கவில்ல எனவே அவரை கைது செய்கிறோம் என்று சிபிஐ அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
ஏற்கனவே இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் ஆம் ஆத்மிக்கு பெரிய அடியாக இருந்தது. பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜகவை வீழ்த்த வரலாற்று வெற்றி என தொடர்ந்து பாஜகவுக்கு டஃப் கொடுத்து வந்த ஆம் ஆத்மியை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் போடப்பட்ட திட்டம்தான் இது என்று அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கைது நடவடிக்கையை விமர்சித்தித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஆம் ஆத்மி தேசிய கட்சி அந்தஸ்தையும் பெற்றிருக்கிறது. மட்டுமல்லாது நாடாளுமன்ற தேர்தலுக்கும் இன்னும் கொஞ்சம்தான் டைம் இருக்கிறது. இப்படி இருக்கையில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆஜராக சொல்லி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அவர் நாளை (ஏப்.16) ஆஜராகிறார்.
டெல்லி மட்டுமல்லாது ஆந்திராவையும் சிபிஐ தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. அதாவது ஆந்திர முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம் இந்த புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை என இருவரும் மாறி மாறி விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு எதிராக சந்திரசேகர ராவ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக மிரட்டுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதேபோல காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுக்கு எதிராக அணிதிரண்டாலும் அதில் திரிணாமுல், ஆம் ஆத்மி கட்சிகள் சேர முன்வரவில்லை. எனவே இந்த தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து நின்று களம் காண போகிறதா? அல்லது மற்றக்கட்சிகளுடன் சேர்ந்து பாஜகவை எதிர்க்கப்போகிறதா? என்பது இந்த வழக்கின் போக்குதான் தீர்மானிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications