காலை சுற்றும் கலால் முறைகேடு வழக்கு! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 15 நாள் காவல்! திகார் சிறையில் அடைப்பு
டெல்லி: முதற்கட்ட லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஏப்ரல் 15 வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்த நிலையில், டெல்லியின் முக்கிய அமைச்சர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். சத்யேந்தர் ஜெயின், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா என 3 அமைச்சர்கள் தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து கடந்த 21ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலும் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை 9 முறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் கைவிட்டுவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவாலின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கெனவே ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனையும் சமீபத்தில்தான் அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இதனையடுத்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியது.

இதனையடுத்து ஜெக்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணையில், கெஜ்ரிவாலிடம் இன்னும் நிறைய விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது எனவே, நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஏப்ரல் 15ம் தேதி வரை கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 2ம் எண் சிறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 19ம் தேதி நாடு முழுவதும் 22 மாநிலங்களில் முதற்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், தற்போது கெஜ்ரிவாலுக்கு காவரை நீட்டித்து வழங்கப்பட்டுள்ள உத்தரவு பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications