நான் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டு போட போகிறேன்: ராகுல் சொன்னதுமே.. ஒரு நிமிடம் உற்று பார்த்த தொண்டர்கள்
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுவார்.. நான் ஆம் ஆத்மி கட்சியின் சின்னத்திற்கு வாக்களிப்பேன் என்று டெல்லியில் நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வ்ருகிறது. 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் இன்னும் 3 கட்ட தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி வியூகம் வகுத்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வந்திருப்பதும் இந்தியா கூட்டணியின் பிரசாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பாக நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டுபோட போவதாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக ராகுல் காந்தி பேசியதாவது:- அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுவார்.. நான் ஆம் ஆத்மி கட்சியின் சின்னத்திற்கு வாக்களிப்பேன்.
மோடியிடம் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் நான் விவாதத்திற்கு ரெடி. ஆனால் பிரதமர் மோடி விவாதத்திற்கு வர மாட்டார். பிரதமர் மோடி என் முன் வந்தால் பல கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது. வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து நான் கேள்வி எழுப்புவேன்.
22 - 25 நபர்களுக்காக மட்டுமே மோடி வேலை செய்கிறார். டெல்லி சந்தினி சவுக்கில் உள்ள சிறிய தொழில் முனைவோர்களிடம் நான் கேட்கிறேன்.. மோடி உங்களுக்கு செய்தது என்ன? ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மற்றும் பிற வரிகள் சிறிய தொழில்களை பாதித்துள்ளது. அதானி, அம்பானிக்கு கோடிக்கணக்கான பணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறார்கள்
பிரதமர் மோடியிடம் நான் கேட்கும் முதல் கேள்வி, அதானிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்பதுதான்? அடுத்ததாக தேர்தல் பத்திரங்கள் பற்றியும் மோடியிடம் கேட்க விரும்புகிறேன். இந்த 2 கேள்விகளிலேயே விவாதம் முடிவுக்கு வந்து விடும். அதேபோல, கொரோனா காலத்தில் மக்கள் அவதிப்படும்போது, தட்டுகளை தட்டுவதற்கும் மற்றும் மொபைல் போன்களில் டார்ச் அடிக்கவும் ஏன் சொன்னார் என்றும் பிரதமரிடம் கேட்க நினைக்கிறேன்.
அரசியலமைப்பை அழிப்பவர்களிடம் இருந்து அதை காப்பாற்றுவதே அனைவரின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும். இதற்காகவே ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. டெல்லியில் 3 தொகுதிகளில் காங்கிரசுக்கும், 4 தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கும் வாக்களிக்குமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன். இதைப்போல ஆம் ஆத்மி தொண்டர்களும் 4 தொகுதிகளில் தங்கள் தலைவர்களுக்கும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்"என்றார்.












Click it and Unblock the Notifications