ம.பி.யில் பாஜக மண்ணை கவ்வுவதை தடுக்க பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களுடன் பறக்கும் பிரதமர் மோடி!
டெல்லி: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெல்வது மிகவும் கடினமானது என பல்வேறு தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்க நாளை அம்மாநிலம் செல்கிறார் பிரதமர் மோடி.
2018-ம் ஆண்டு மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அம்மாநில முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் இருந்து வந்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்து கமல்நாத் ஆட்சியை கவிழ்த்தது பாஜக. இதனையடுத்து சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக புதிய ஆட்சி அமைத்தது.

தற்போது மத்திய பிரதேசம் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. சட்டசபை தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகள், மத்திய பிரதேசத்தில் பாஜக தோல்வியைத் தழுவும் என்றே கூறிஉள்ளன. சிவோட்டர் கருத்து கணிப்பு மட்டுமே பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருக்கும் என கூறியிருக்கிறது.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்துக்கு பிரதமர் மோடி நாளை பயணம் மேற்கொள்கிறார். நாளை பிற்பகல் 2:15 மணியளவில் சாகர் மாவட்டத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி, சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் ஜி நினைவிடத்தில் பூமி பூஜை செய்கிறார். பிற்பகல் 3:15 மணியளவில், தனாவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார், அங்கு அவர் சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் ஜி நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ரூ100 கோடியில் நினைவகம்: பிரதமர் தனது பயணத்தின் சிறப்பு அடையாளமாக முக்கிய துறவிகள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளை கௌரவிக்க உள்ளார். தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு, 11.25 ஏக்கர் பரப்பளவில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில், சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் ஜி நினைவகம் கட்டப்பட உள்ளது. இந்த அற்புதமான நினைவிடத்தில் சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் அவர்களின் வாழ்க்கை, தத்துவம் மற்றும் போதனைகளை காட்சிப்படுத்த ஒரு ஈர்க்கக்கூடிய கலை அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சியகம் அமைக்கப்படும். நினைவிடத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கான தங்குமிடம், உணவு ஆகிய வசதிகளும் இடம் பெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.4,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
புதிய ரயில் பாதை திட்டம்: கோட்டா-பினா ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பார். ரூ.2475 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த்த் திட்டம் ராஜஸ்தானின் கோட்டா மற்றும் பரன் மாவட்டம் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் குணா, அசோக்நகர் மற்றும் சாகர் மாவட்டம் வழியாக செல்கிறது. கூடுதல் ரயிலின் பாதை சிறந்த இயக்கத்திற்கான திறனை அதிகரிக்கும் மற்றும் பாதையில் ரயிலின் வேகத்தை மேம்படுத்த உதவும்.
சாலை திட்டங்கள்: ரூ.1580 கோடி மதிப்பிலான 2 சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதில் மோரிகோரி - விதிஷா - ஹினோதியாவை இணைக்கும் நான்கு வழிச்சாலை திட்டம் மற்றும் ஹினோதியாவை மெஹ்லுவாவுடன் இணைக்கும் சாலைத் திட்டம் ஆகியவை அடங்கும்.












Click it and Unblock the Notifications