குற்றவாளியை காப்பாற்ற முயற்சி.. கொல்கத்தா மருத்துவர் பலாத்கார கொலை குறித்து ராகுல் காந்தி ஆவேசம்!
டெல்லி: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவமனை மற்றும் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்பில் பயிற்சி பெற்று வந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு பணியில் இருந்த அந்த பெண் பயிற்சி மருத்துவர், மறுநாள் காலை மருத்துவமனையில் உள்ள ஆடிட்டோரியம் ஒன்றில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

உடற்கூறாய்வில், உயிரிழந்த பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராயை (33) கைது செய்தனர்.
பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்கு வங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பணியிடங்களில் மருத்துவர்களின் குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி, இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவமனை மற்றும் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய மனிதாபிமானமற்ற கொடூரமான செயலால், மருத்துவர்கள் சமூகம் மற்றும் பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
மேலும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி, மருத்துவமனை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின்மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. மருத்துவக் கல்லூரி போன்ற இடங்களில் மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை எப்படி வெளியில் படிக்க அனுப்புவார்கள்?
நிர்பயா வழக்குக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட கடுமையான சட்டங்கள் கூட இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதில் தோல்வியடைந்தது ஏன்? ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரையிலும், கத்துவா முதல் கொல்கத்தா வரையிலும் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்து ஒவ்வொரு கட்சியும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தீவிர விவாதங்களை நடத்தி உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த சமயத்தில், தாள முடியாத வலியுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பக்கம் நான் நிற்கிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அதோடு, இந்த சமத்துவம் குற்றவாளிகளுக்கு சமுதாயத்தில் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.
கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரமான கொலை தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசு மீது அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் ராகுல் காந்தி, உள்ளூர் நிர்வாகத்தையும், மருத்துவமனை நிர்வாகத்தையும் காட்டமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications