ஏர் இந்தியாவுக்கு பறந்த உத்தரவு! நாளை முதலே எல்லாம் மாற போகுது! மத்திய அரசு முக்கிய உத்தரவு
டெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஏர் இந்தியா வசம் உள்ள போயிங் ட்ரீம்லைனர் விமானங்களின் பாதுகாப்பு சோதனைகளைத் தீவிரப்படுத்த இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் மிக மோசமான விபத்தில் சிக்கியது. அந்த விமானம் மதியம் 1.17 மணியளவில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டது. புறப்பட்டு சில நிமிடங்கள் ஆகியிருந்த நிலையில், விமானம் 675 அடியை அடைந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்தில் சிக்கியது.

விபத்து
இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஏர் இந்தியா வசம் உள்ள போயிங் ட்ரீம்லைனர் விமானங்களின் பாதுகாப்பு சோதனைகளைத் தீவிரப்படுத்த இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரவு
அதன்படி நாளை முதல் அதாவது ஜூன் 15ம் தேதி முதல் ஏர் இந்தியாவின் போயிங் 787-8/9 ட்ரீம்லைனர் விமானங்கள் அனைத்தும் தீவிர பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 12ம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் ஒருவர் தவிர அனைத்து பயணிகளும் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எரிபொருள், என்ஜின் மற்றும் ஹைட்ராலிக் அமைப்புகளின் கண்காணிப்பு உள்ளிட்ட மேம்பட்ட சோதனைகளை மேற்கொள்ளுமாறு இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சோதனைகளின் அறிக்கையை ஆய்வுக்காகச் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு டெஸ்டிங்
GenX என்ஜின்களைக் கொண்ட ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் விமானங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு சோதனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
- எரிபொருள் அளவு கண்காணிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்பு சோதனைகள்.
- உள்ளே இருக்கும் காற்றழுத்தக் கருவி மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் ஆய்வு.
- எலக்ட்ரானிக் என்ஜின் கட்டுப்பாட்டு அமைப்பின் சோதனை.
- என்ஜின் எரிபொருள் மூலம் இயங்கும் கருவியின் செயல்பாடு மற்றும் எண்ணெய் அமைப்பின் சோதனை.
- ஹைட்ராலிக் அமைப்பின் திறன் சோதனை மற்றும் விமானத்தின் டேக்-ஆஃப் நிலைகள் என பல ஆய்வுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
- மேலும், இரண்டு வாரங்களுக்குள் பவர் அஷ்யூரன்ஸ் (power assurance) சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
அறிவுறுத்தல்
இது மட்டுமின்றி கடந்த 15 நாட்களில் போயிங் ட்ரீம்லைனர் விமானங்களில் ஏற்பட்ட தொடர்ச்சியான பிரச்சனைகள் உடனடியாக மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். மறு ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு, மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
ஜூன் 12ம் தேதி சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது மோதியதில் விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவரைத் தவிர 241 பேரும் உயிரிழந்தனர்.
முதல் பெரிய விபத்து
2011ஆம் ஆண்டு போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நடந்த முதல் பெரிய விபத்து இதுவாகும். அதேநேரம் கடந்த 2024ஆம் ஆண்டில் போயிங் நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர், போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் கட்டமைப்பில் இருந்த சில குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications