அயோத்தி விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்த சமரச குழு.. நாளை விசாரணை
டெல்லி: அயோத்தியில் விவாதத்திற்கு உரிய இடம் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட சமரச குழு தனது இடைக்கால அறிக்கையை சீலிட்ட உரையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அடுத்தகட்ட விசாரணை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் வெப்சைட்டில், இன்று வெளியிட்டுள்ள தகவல்படி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன் மற்றும் எஸ்.அப்துல் நாசிர் ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக கடந்த மார்ச் 8 தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியபோது, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில், மூன்று பேர் கொண்ட சமரச குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்பான தகவல்கள் ரகசியமாகவே இருக்கும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சமரச குழுவில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த மூன்று பேர் கொண்ட சமரச குழு சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினரிடம் ஆலோசனை நடத்தி, அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த குழு தனது இடைக்கால அறிக்கையை இன்று சீலிட்ட உரையில், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக, பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
1992 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் பிறகு அந்த இடம் சர்ச்சைக்குரியதாக நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications