வாவ்! ஆப்ரேஷன் இல்லை.. வெறும் ஆயுர்வேத சிகிச்சை மூலம் டெல்லி இளைஞர் இதயத்தில் இருந்த அடைப்பு நீக்கம்
டெல்லி: மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கே போராடிய நபரின் இதயத்தில் இருந்த அடைப்பு ஆயுர்வேத சிகிச்சை மூலமாகவே குணப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை வியக்க வைப்பதாக இருக்கிறது.
இந்த நவீனக் காலத்தில் நாம் அதிகப்படியான நேரம் ஒரே இடத்தில் தான் அமர்ந்து வேலை செய்கிறோம். இதனால் உடலில் கொழுப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

அப்படிதான் மாரடைப்பால் உயிருக்குப் போராடிய நபர் ஆயுர்வேத சிகிச்சை மூலமாகவே குணப்படுத்தப்பட்ட சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.
ஆட்டோ டிரைவர்: கடந்த நவம்பர் 2022இல் 50 வயதான ஆட்டோ ஓட்டுநர் அவதேஷ் குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. இருப்பினும், அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் LAD எனப்படும் அவரது இடது முன்புற தமனியில் 95% அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இப்போது அவரது இதயத்தில் இருந்த அடைப்பு முழுமையாகச் சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக அவர் ஆப்ரேஷன் எதுவும் செய்யவில்லை. அந்த நபர் நான்கு மாதங்கள் முழுக்க முழுக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்த நிலையில், அவர் முழுமையாகக் குணமடைந்துள்ளார். AIIA எனப்படும் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் ஆயுர்வேத முறையில் அவர் சிகிச்சை எடுத்துள்ளார்.
அடைப்பு: இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அவதேஷ் குமார் கூறுகையில், "எனக்கு 2022ஆம் ஆண்டு நவ.12ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் என்னை சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். மருத்துவமனையில் எனக்கு ஏழு நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். அதன் பிறகும் சில மாதங்கள் மருந்துகளை எடுத்துக்கொண்டேன். அதன்பிறகு செய்யப்பட்ட ஆஞ்சியோகிராஃபியில் இடது முன் தமனியில் 95% அடைப்பு மற்றும் வலது கரோனரி தமனியில் 70% அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
உடனடியாக இதற்கான சிகிச்சை எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அந்த சிகிச்சைக்கு அதிகப் பணம் செலவாகும் என்றும் அவர்கள் கூறினர். என்னிடம் பணம் இல்லாததால், நான் அலோபதி முறையில் சிகிச்சை எடுக்கவில்லை. மாறாக ஆயுர்வேத சிகிச்சைக்காக ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் ஆயுர்வேத சிகிச்சை முறைக்கு சென்றேன். அங்கு கடந்தாண்டு அக். மாதம் மீண்டும் ஆஞ்சியோகிராஃபி செய்தார்கள்.
சிகிச்சை: அதில் இடது முன் தமனியில் 85-90% அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல மற்றொரு இடத்தில் 65-70% அடைப்பு இருப்பதையும் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதன் பிறகு உடனடியாக எனக்குச் சிகிச்சையையும் அவர்கள் ஆரம்பித்தார்கள்" என்று அவர் தெரிவித்தார்
இது குறித்து ஏஐஐஏ துறையின் உதவிப் பேராசிரியை டாக்டர் திவ்யா கஜாரியா கூறுகையில், "அவருக்கு நாங்கள் பஞ்சகர்மா சிகிச்சைகளில் ஒன்றான விரேச்சனா அளித்தோம். தொடர்ந்து 3 மாதங்களுக்கு சில ஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்தோம். இப்போது அவரது இதயத்தில் உள்ள அடைப்பை நீக்கி இருக்கிறோம். வழக்கமாக அனைவருக்கும் இருப்பதைப் போன்ற நிலை உருவாகி இருக்கிறது" என்றார்.
ஆயுர்வேத சிகிச்சை: அவர் முதலில் ஏஐஐஏ மருத்துவமனைக்கு வரும் போது அவருக்கு மூச்சு விடவே சிரமம் இருந்துள்ளது. அவரால் 500 அடிக்கு மேல் நடக்கவே முடியவில்லை. மேலும், நெஞ்சு வலியும் கூட இருந்தது. பொதுவாகவே இடது தமனியில் எதாவது சிக்கல் ஏற்பட்டால் அது ஆபத்தானது. ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொள்ள அவருக்குப் பணம் இல்லாத நிலையில் ஆயுர்வேத மருத்துவம் மூலம் இப்போது அவர் குணமடைந்துள்ளார்.
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், "பொதுவாக LAD எனப்படும் இடது முன்புற தமனியில் பிளாக்குகள் இருந்தால் அப்போது தான் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கிறது. . மிகப்பெரிய கரோனரி தமனியாக இருப்பதால் இந்த LAD தமனி இதயத்தின் இடது பக்கத்திற்கு அதிகப்படியான இரத்தத்தை வழங்குகிறது. அதேநேரம் இந்த தமனியில் பிளேக் ஏற்படும் ஆபத்துகளும் அதிகமாக இருக்கிறது. கரோனரி தமனி நோய் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது.
இதுபோன்ற நேர்ந்தால் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் செய்ய வேண்டும். அப்போது தான் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க முடியும். ஆனால், இந்த நபருக்கு ஆப்ரேஷன் எதுவும் இல்லாமல் வெறும் ஆயுர்வேத சிகிச்சையில் இந்த தமனியில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications