பக்ரீத்.. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மகிழ்ச்சி!இனிப்போடு வாழ்த்து பரிமாறிய இருநாட்டு வீரர்கள்!
டெல்லி: பக்ரீத் கொண்டாட்டத்தையொட்டி இன்று பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகள் பரிமாறி வாழ்த்தை பகிர்ந்து கொண்டனர்.
இந்தியா முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் நாள்க்காட்டியில் ஆண்டுதோளும் ஹஜ் மாதம் 10ம் தேதி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக களையிழந்த பக்ரீத் கொண்டாட்டம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரகிறது.

பக்ரீத் கொண்டாட்டம்
ஹஜ் பெருநாள் என அழைக்கப்படும் இந்த பண்டிகையானது இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை குறிக்கும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம் மக்கள் பக்ரீத் கொண்டாடி வருகின்றனர்.

சிறப்பு தொழுகை
அதிகாலையிலேயே புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். மேலும் ஏழைகளின் பசியை போக்கும் வகையில் உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து குர்பானி வழங்கி நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாடப்பட்டு வருகிறது.

எல்லையில் கொண்டாட்டம்
இந்நிலையில் தான் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தீபாவளி, பக்ரீத் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின் போது இருநாட்டு வீரர்களும் இனிப்பு பரிமாறிக்கொள்வது வழக்கமானதாக உள்ளது. அந்த வகையில் இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

தலைவர்கள் வாழ்த்து
இன்று பக்ரீத் கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் முக ஸ்டாலின், அதிமுகவின் முன்னாள் முதல்வர்கள் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பல தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications