உயிர் காக்கும் ரெம்டெசிவிர்.. சரியான நேரத்தில் இந்தியாவுக்கு வழங்கிய வங்கதேசம்
டெல்லி: கொரோனா 2ஆம் அலையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவும் வகையில் சுமார் 10,000 ரெம்டெசிவிர் மருந்துகள் வங்கதேசம் இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் தொடர்ந்து மோசமாகிக் கொண்டே செல்கிறது. கடந்த 10 நாட்களாகவே இந்தியாவில் கண்டறியப்படும் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மேலும், நாட்டின் பல பகுதிகளிலும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருத்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், பல்வேறு உலக நாடுகளும் இந்தியாவுக்கு மருத்து உதவி பொருட்களை அனுப்பி வருகின்றன.
அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவுக்கு உதவும் வகையில் 10,000 ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்கியுள்ளது. இதனை வங்கதேசத்தின் துணை உயர் ஸ்தானிகர் டூஃபிக் ஹசன் இந்திய அதிகாரிகளிடம் வழங்கினார்.
Bangladesh is sending medicines, including Remdivisir and other drugs, along with PPE kits to India. pic.twitter.com/U81gQRxtp5
— Devirupa Mitra (@DevirupaM) April 29, 2021
வங்கதேசத்தில் தயாரிக்கப்பட்ட இந்த 10,000 ரெம்டெசிவிர் மருந்துகள் அந்நாட்டு மக்கள் சார்பாக மருத்துவ உதவியாக இந்தியாவுக்கு அனுப்பப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா, கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குத் துணை நிற்பதாகவும் 10,000 ரெம்டெசிவிர் மருந்துகள், 30,000 பிபிஇ உபகரணங்கள் மற்றும் விட்டமின் மாத்திரைகளை இந்தியாவுக்கு வழங்குவுதாகவும் அறிவித்திருந்தார். வங்கதேசம் மட்டுமின்றி 40க்கும் மேற்பட்ட நாடுகள் மருத்துவ உதவி பொருட்களை அனுப்பி உதவுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.