பைக்கில் செல்ல தடை.. மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் போட்ட விசித்திர உத்தரவு!
டெல்லி: மேற்கு வங்கத்தில் ஏப்.23ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. எனவே இன்று முதல் பைக்கில் மக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு மேற்கு வங்கத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் ஆணையம் பிறப்பித்திருக்கும் உத்தரவில், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் சாலையில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரநிலை மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு விதிவிலக்கு உண்டு. இன்று முதல் ஏப்.23 வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

இரவில் முழு தடை எனில், பகல் நேரங்களில் (காலை 6 - மாலை 6) இருசக்கர வாகனங்களில் இருவர் அமர்ந்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லவும், மருத்துவத் தேவைகளுக்கும் மட்டுமே அனுமதி உண்டு.
இதில் ஏப்.23 அன்று மட்டும் பைக்குகளில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை அச்சுறுத்துவதைத் தவிர்க்க, பைக் ஊர்வலங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருக்கிறது.
மேற்கு வங்கத்தில், பைக் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பது புதிய விஷயம் கிடையாது. இதற்கு முன்னர், 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும், வாக்குப்பதிவுக்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே பைக் ஊர்வலங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
ஆனால், மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை பைக் ஒட்டக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இது குறித்து விளக்கமளித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வன்முறையற்ற, சுதந்திரமான தேர்தலை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை என தெரிவித்திருக்கிறார்.
ஆனால், மேற்கு வங்கத்தில் நடப்பதை எல்லாம் பார்க்கும்போது வித்தியாசமாக தெரிகிறது என்று ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்திருக்கின்றனர்.
ஏற்கெனவே மேற்கு வங்கத்தில், உள்ளூர் போலீசை விட அதிக அளவில் மத்திய அரசின் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. அதாவது மேற்கு வங்கத்தில் தற்போது 2.4 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த மாநிலத்தின் மொத்த போலீஸ் எண்ணிக்கையே 1.04 லட்சம் தான். அப்படியெனில் மாநிலக் காவல்துறையின் எண்ணிக்கையை விட மத்தியப் படைகளின் எண்ணிக்கை இரண்டரை மடங்கு அதிகமாக இருக்கிறது.
இவ்வளவு பாதுகாப்பு இருந்தும், பைக்கில் செல்ல தடை விதிக்கப்படுவது எல்லாம் ரொம்ப ஓவர் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications