வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன், மாஜி பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது!
டெல்லி: தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதேபோல் முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. அரசியல் கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட துறைகளில் அளப்பறிய சாதனையை நிகழ்த்துபவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது மத்திய அரசு அறிவித்துள்ளது. மறைவுக்கு பின் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதேபோல் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டிற்கு சரண்சிங் ஆற்றிய ஒப்பற்ற பணிக்காக பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நரசிம்ம ராவ்: முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை எனவும் நரசிம்ம ராவ் அழைக்கப்படுகிறார். 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று நரசிம்ம ராவ் பிரதமரானார். 5 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார்.
சரண் சிங்: இந்தியாவின் 7-வது பிரதமராக பதவி வகித்த சரண் சிங், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். ஏழு மாதங்களே பிரதமராக சரண் சிங் பதவி வகித்தார். இந்தியாவில் குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்தவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். விவசாய தலைவராகவும் சரண் சிங் அறியப்பட்டார்.
எம் எஸ் சுவாமிநாதன்: மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் எனப்படும் எம் எஸ் சுவாமிநாதன் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர். வேளாண் துறையில் மிகப்பெரிய விஞ்ஞானியான இவர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார்.
மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர். கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.
வேளாண் துறையில் மறுமலர்ச்சி: உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் 90 வயதிலும் தனது ஆராய்ச்சி அறக்கட்டளைப் பணிகளை சுறுசுறுப்புடன் மேற்கொண்டு வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications