"பீகாரில் 64 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்.." தேர்தல் ஆணையம் மேஜர் தகவல்! என்ன நடக்கிறது
டெல்லி: பீகார் மாநிலத்தில் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குச் சிறப்புச் சீர்திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் கீழ் பீகார் முழுக்க சுமார் 64 லட்சம் பேர் இதுவரை நீக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர், புலம்பெயர்ந்தோர் என இந்த 64 லட்சம் பேரைத் தேர்தல் ஆணையம் வாக்காள் பட்டியலில் இருந்து நீக்கவுள்ளது.
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. ஒரு பக்கம் தேர்தலை முன்னிட்டு அங்கு அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. மறுபுறம் அங்குத் தேர்தல் ஆணையமும் சிறப்புச் சீர்திருத்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் ஆணையம் தகவல்
பீகாரில் ஜூன் 24 வரை பதிவு செய்யப்பட்ட 7.90 கோடி வாக்காளர்களில் 7.23 கோடிக்கும் அதிகமானோர் சிறப்புச் சீர்திருத்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர். இதற்கான வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் மேலும் பல ஆயிரம் பேர் இதில் பங்கேற்றிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "7.23 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இந்த வாக்காளர்களின் பெயர்கள் அனைத்தும் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். மீதமுள்ள வாக்காளர்களின் படிவங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணி ஆகஸ்ட் 1க்குள் முடிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விருப்பம்
இது தொடர்பாகப் பிரபல ஆங்கில ஊடகத்திற்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் அளித்த பேட்டியில், "SIR அறிவுறுத்தல்கள்படி, படிவங்களைச் சமர்ப்பிக்காதவர்கள் தேவையான ஆவணங்களுடன் செப்டம்பர் 1 வரை சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு தகுதியான வாக்காளரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவே தேர்தல் ஆணையம் விரும்புகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 1 வரை, எந்தவொரு வாக்காளரோ அல்லது அரசியல் கட்சியோ விடுபட்ட தகுதியான வாக்காளரைச் சேர்க்க அல்லது தகுதியற்ற வாக்காளருக்கு எதிராக ஆட்சேபணை தெரிவிக்கத் தேர்தல் பதிவு அதிகாரியிடம் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் சார் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
64 லட்சம் பேர் நீக்கம்
மேலும், சார் நடவடிக்கையின் விளைவாக பீகார் முழுக்க சுமார் 64 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 22 லட்சம் இறந்த வாக்காளர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்த ஏழு லட்சம் வாக்காளர்கள் மற்றும் நிரந்தரமாக இடம் மாறிய அல்லது கண்டுபிடிக்க முடியாத சுமார் 35 லட்சம் வாக்காளர்கள் அடங்குவர். பீகாரின் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் எனச் சிறப்பு வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கைக்கு உதவிய அனைவரையும் பாராட்டுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள்
மேலும், நீக்கப்பட்ட இந்த 64 லட்சம் பேரின் தகவல்களை அங்குள்ள அனைத்து 12 அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட கட்சிகள் அதை ஆய்வு செய்து எதாவது சிக்கல் இருந்தால் அதைத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கலாம். அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications