பொய்யாகி போன "அரசியல் சாணக்கியர்" அமித் ஷா கணிப்பு.. எதிர்பாராத நேரத்தில் ட்விஸ்ட் வைத்த பீகார் களம்
பாட்னா: பீகார் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வரும் சூழலில், அங்கு என்டிஏ மிகப் பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. பாஜக தலைவர்களே இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை. அரசியல் சாணக்கியரான அமிக் ஷா கணிப்பு கூட இதில் பொய்த்துப் போய் இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. அங்கு நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடந்த நிலையில், இப்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. காலை வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதலே பாஜக கூட்டணியே முன்னிலையில் இருக்கிறது.

என்டிஏ முன்னிலை
இந்தத் தேர்தலில் ஆளும் என்டிஏ கூட்டணி மிகப் பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதில் விஷயம் என்னவென்றால் பல பாஜக தலைவர்களே கூட இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என நினைக்கவில்லை.. பாஜக கூட்டணி கிட்டத்தட்ட 193 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இது பல பாஜக தலைவர்கள் சொன்ன இடங்களைக் காட்டிலும் அதிகமாகும்.
அமித் ஷா கணிப்பு
விஷயம் என்னவென்றால் தேர்தல் சாணக்கியராக அறியப்படும் அமித் ஷா கூட 160 இடங்களில் தான் என்டிஏ வெல்லும் என்பது போலக் கூறியிருந்தார். ஆனால், அதையும் தாண்டி அதிகபட்ச இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. அந்த கூட்டணியில் பாஜக 85 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 77 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 22 இடங்களிலும், ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) ஆறு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. இது அமித் ஷா வைத்த டார்கெட்டை விட அதிகமாகும்.
பீகாரில் வெல்வோம் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு இருந்தது உண்மைதான். ஆனால், இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என்பதை பாஜக கூட எதிர்பார்க்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. தாங்கள் வைத்த இலக்கையே கூட பாஜக முறியடித்துக் கொண்டது. பாஜக, ஜேடியு மட்டுமின்றி இதர கூட்டணிக் கட்சிகளும் கூட மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. என்டிஏ இடங்கள் அதிகரிக்க அதுவே பிரதானக் காரணமாக இருக்கிறது.
என்ன சொன்னார்
முன்னதாக வாக்குப்பதிவுக்குத் தொடங்குவதற்கு முன்பு இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமித் ஷா, 160 இடங்களை என்டிஏ கூட்டணி வெல்லும் என கூறியிருந்தார். மேலும், கூட்டணி நல்ல நிலையில் இருப்பதாகவும் மிகச் சிறப்பான வெற்றியை பாஜக அடையும் என்றும் அவர் கூறியிருந்தார். மூன்றில் 2 பங்கு தொகுதிகளில், அதாவது 160 இடங்களில் வெல்லும் என்று உறுதியாகத் தெரிவித்தார். மேலும், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு முக்கியக் கூட்டணிக் கட்சிகளும் சமமான வெற்றியைப் பெறும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அவர் சொன்னதில் ஒரு விஷயம் சரியாகவும் ஒரு விஷயம் தவறாகவும் போய் இருக்கிறது. கடந்த 2020 தேர்தலில் பாஜகவை விட நிதிஷ் கட்சி குறைந்த இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால், இந்த முறை இரு கட்சிகளுமே கிட்டத்தட்ட சம அளவு இடங்களையே கைப்பற்றியுள்ளது. அதேநேரம் என்டிஏ முன்பே குறிப்பிட்டது போல அமித் ஷா கணிப்பை விட கூடுதல் இடங்களில் வென்றுள்ளது. இந்தக் கணிப்பு பொய்யானதற்கு அமித் ஷா சந்தோஷம் தான் அடைந்திருப்பார். அந்தளவுக்கு அட்டகாசமான ஒரு வெற்றியை என்டிஏ பதிவு செய்துள்ளது.
இந்தியா கூட்டணி
மறுபுறம் இந்தியா கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. நீண்ட காலமாகவே கூட்டணியின் பலவீனமாக இருந்துவரும் காங்கிரஸ் மீண்டும் சொதப்பி இருக்கிறது. கடந்த 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறை 61 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், 10 தொகுதிகளில் வெல்லுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
அதேபோல ஆர்ஜேடி வெல்லும் இடங்களும் கணிசமாகக் குறைந்துள்ளது. நிதிஷ் குமாருக்கு எதிராகத் தேஜஸ்வி யாதவ் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டபோதிலும் அது பெரியளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதையே அது காட்டுகிறது.












Click it and Unblock the Notifications