"எல்லாம் அப்பாவுக்காக.." லாலு பிரசாத் யாதவுக்காக கிட்னியை தானமாக தரும் செல்ல மகள்! குவியும் பாராட்டு
டெல்லி: பீகார் முன்னாள் முதல்வரும் மூத்த அரசியல்வாதியுமான லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பீகார் மாநிலத்தில் மூத்த அரசியல்வாதி லாலு பிரசாத் யாதவ். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவராக உள்ள இவர், மூன்று முறை பீகார் முதல்வராகவும் உள்ளார்.
74 வயதாகும் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தீவிர அரசியலில் இருந்தும் ஒதுங்கியே இருக்கிறார்.
”தந்தையின் இடத்தில் மனைவி” உ.பி. லோக் சபா இடைத்தேர்தலில் டிம்பிள் யாதவ் போட்டி.. சமாஜ்வாதி அறிவிப்பு
பீகார் அரசியல்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பீகார் அரசியலைத் தீர்மானித்த முக்கிய தலைவர்களில் ஒருவர் லாலு பிரசாத் யாதவ். மாட்டுத் தீவன வழக்கில் எப்போது இவர் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றாரோ அப்போது முதலே இவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியது. அதன் பின்னர் பல முறை டெல்லி, மற்றும் ராஞ்சி மருத்துவமனைகளில் இவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தீவிர அரசியலில் இருந்து ஓய்வு
இதனால் சில ஆண்டுகளாகவே இவர் தீவிர அரசியலில் இருந்து விலகியே உள்ளார். 2020இல் நடந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் கூட அவரது மகன் தேஸ்வி யாதவ் தான் அனைத்து கட்சி பணிகளையும் மேற்கொண்டு இருந்தார். இந்தச் சூழலில் சமீப காலத்தில் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. அவரது கிட்னி தொடர்ந்து செயலிழந்து வருவதாகக் கூறப்பட்டது.
கிட்னி மாற்று ஆப்ரேஷன்
இதனிடையே லாலு பிரசாத் யாதவுக்கு இந்த மாத இறுதியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.. இந்தியாவில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பல விதிகள் உள்ளன. உறவினர்கள் தானம் அளிக்கவில்லை என்றால் அரசில் பதிவு செய்து பல காலம் காத்துக்கிடக்க வேண்டும். இதனால் லாலு பிரசாத் யாதவுக்கு மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சிலர் கேள்வி எழுப்பினர்.
மகள் கிட்னி தானம்
இதற்கிடையே சிங்கப்பூரில் வசிக்கும் லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகள் ரோகிணி ஆச்சார்யா அவருக்கு கிட்னி வழங்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவியது. இந்த தகவலை உறுதி செய்துள்ள ரோகிணி ஆச்சார்யா, "ஆம், அது உண்மைதான். என் சிறுநீரகத்தை அப்பாவுக்குக் கொடுப்பதில் எனக்குப் பெருமை தான்" என்று தெரிவித்தார். லாலு யாதவ் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு உடல்நிலை பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.
மருத்துவர்கள்
சிகிச்சைக்காகச் சென்றிருந்த சிங்கப்பூரில் இருந்து லாலு யாதவ் கடந்த மாதம் தான் அங்கிருந்து திரும்பினார்.. சிறுநீரகம் மோசமான நிலையில் இருப்பதால் உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்தச் சூழலில் தான் ரோகிணி ஆச்சார்யா தனது கிட்னியை அப்பாவுக்குக் கொடுக்க முன் வந்துள்ளார்.
லாலு பிரசாத் யாதவ்
பீகார் அரசிலும் மத்திய அரசிலும் பல்வேறு பொறுப்புகளை லாலு பிரசாத் யாதவ் வகித்துள்ளார். குறிப்பாக ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது, அதை வெற்றிகரமாக லாபகரமாக மாற்றியவர் லாலு பிரசாத் யாதவ். இருப்பினும், பீகார் முதல்வராக இருந்த போது, மாட்டுத் தீவன கொள்முதலில் ஊழல் செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற அவர், இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.