BIHAR SIR: தேர்தல் ஆணையத்திற்கு எதிர்ப்பு.. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி
டெல்லி: பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில், இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி நடத்தியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் நடத்திய திருத்த நடவடிக்கையில், பல லட்சம் வாக்காளர்கள் கைவிடப்பட்டிருக்கின்றனர். உயிரிழந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள் ஆகியோரைத்தான் விடுவித்திருப்பதாக ஆணையம் கூறுகிறது. ஆனால் இதனை எதிர்க்கட்சியினர் ஏற்க மறுக்கின்றனர். பாஜக கூட்டணியில் உள்ள ஜேடியு அமைச்சரும் இந்த விவகாரத்தில் ஆணையத்தை விமர்சித்திருக்கிறார்.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் பேரணியை நடத்தி வருகின்றனர். அவர்கள் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியுள்ளனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக SIR என்று எழுதப்பட்ட போஸ்டர்களை கிழித்து குப்பை தொட்டியில் வீசி எறிந்தனர்.
பின்னணி என்ன?
பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தேர்தலுக்கு முன், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. ஏற்கெனவே உள்ள வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது சாதாரண திருத்தம். சிறப்பு திருத்தம் எனில், வாக்காளர்கள் எத்தனை பேர் என்பதை புதியதாக கணக்கெடுப்பதாகவும். பழைய பட்டியல் கணக்கில் கொள்ளப்படாது. உங்கள் பெயர் பழைய பட்டியலில் இருந்தாலும், தற்போதைய ஆய்வில் சரியான ஆதாரங்களை காட்டினால் மட்டுடிமே புது பட்டியலில் உங்கள் பெயர் இணைத்துக்கொள்ளப்படும்.
எல்லாம் ஓகேதான். ஆனால் தேர்தலுக்கு சொற்ப காலமே இருக்கையில், இப்படி ஒரு திருத்தம் தேவையா? திருத்தம் செய்வது என்று முடிவெடுத்துவிட்டால் அதற்கான காலத்தை முன்கூட்டியே ஒதுக்கியிருக்க வேண்டாமா? என்பதுதான் தற்போதைய கேள்வி.
தற்போது திருத்தப்பணிகளை 99% முடித்திருப்பதாக ஆணையம் கூறியிருக்கிறது. ஆனால் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் புதிய பட்டியலில் விடுபட்டிருக்கிறது. உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் வாக்காளர் அட்டையை கொண்டிருப்பவர்கள் என பட்டியல் நீள்கிறது. இதற்கு எதிராகத்தான் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications