நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது என்னை பேச வேண்டாம் என பாஜக கூறியது: மணிப்பூர் எம்.பி பரபர
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வேண்டாம் என பாஜக எம்.பிக்கள் தன்னிடம் வலியுறுத்தியதாக அம்மாநிலத்தை சேர்ந்த எம்.பி தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் 'மெய்தி' இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த மே 3-ந் தேதி, மணிப்பூரில் பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. 3 மாதங்களை கடந்தும் கலவரம் இன்னும் ஓயவில்லை.

இதனிடையே மணிப்பூரில் குகி பழங்குடி இனத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்ததோடு, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வைக்கும் வகையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததாக எதிர்க்கட்சிகளின் " இந்தியா" கூட்டணி தெரிவித்தது. எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 10 ஆம் தேதி வரை தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. 10 ஆம் தேதி பிரதமர் மோடி பதிலளித்து பேசினார்.
இந்த விவாதத்தின் பேசிய எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பேசின. இதனிடையே, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் போது தன்னை பேசக் கூடாது என்று பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பிக்கள் கேட்டுக்கொண்டதாக மணிப்பூரை சேர்ந்த எம்.பி லோர்ஹோ எஸ். ஃபோஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழுக்கு நாகா மக்கள் முன்னணி (NPF) எம்.பி லோர்ஹோ எஸ். ஃபோஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் நான் பேச விரும்பினேன்.ஆனால், நான் பேச வேண்டாம் என்று பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பிக்கள் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேச என கேட்டுக்கொண்டனர். குறிப்பாக பாஜக இதை வலியுறுத்தியது. உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் விவகாரம் குறித்து நிறைய பேச இருப்பதாகவும் அதனால், நான் பேச வேண்டாம் என்றும் பாஜக எம்.பிக்கள் அறிவுறுத்தினார்கள்.
நான் சபாநாயகரிடம் இது குறித்து எதுவும் கேட்கவில்லை. ஏனெனில், நான் இதை கோரினாலும் எனக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று அறிந்து இருந்தேன். மணிப்பூரை சேர்ந்த மற்றொரு எம்.பியுமான பாஜகவை சேர்ந்த ஆர்.கே ரஞ்சன் சிங்கிடம் இவ்விவகாரம் குறித்து நான் கேட்டேன். அவரிடமும் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications