“தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்” அதிமுக-பாஜக கூட்டணிக்கு பிரதமர் வாழ்த்து
டெல்லி: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இன்று பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இன்று அமித்ஷா முன்னிலையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமியையும், மறுபக்கம் அண்ணாமலையையும் வைத்துக்கொண்டு அமித்ஷா கூட்டணி சக்சஸ் ஆன விஷயத்தை கூறியிருந்தார்.

இந்நிலையில் தனது x தளத்தில் இது தொடர்பாக பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது, "வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்!
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம். மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம்.
தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.
பாஜகவுடன் கூட்டணி என்பது பல சலசலப்புகளுக்கு இடையேதான் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் என இரண்டு தேர்தல்களிலும் பாஜக+அதிமுக கூட்டணி தோல்வியடைந்திருக்கிறது. மறுபுறம் பாஜக 20 ஆண்டுகளுக்கு பிறகு 4 சட்டமன்ற தொகுதியை வெற்றி பெற்றிருக்கிறது. ஆக இந்த கூட்டணி கணக்கு பாஜகவை தமிழகத்தில் காலூன்ற வைப்பதற்காகவே என்று பேசப்பட்டு வருகிறது.
முன்னதாக அண்ணாமலை, அறிஞர் அண்ணா குறித்து பேசிய விஷயங்கள் அதிமுகவில் வெடியாய் வெடித்தது. அண்ணாவை பற்றிய பேசிய கட்சியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று எல்லாம் ரத்தத்தின் ரத்தங்கள் கொந்தளித்தனர். இதை எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அறிவித்தார். இருந்தாலும் தற்போது கூட்டணிக்காக ஒன்று சேர்ந்திருப்பது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டணியின் வெற்றி எப்படி இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருப்பது மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications