மோடி இல்லத்தில் நடந்த என்டிஏ ஆலோசனை கூட்டம் நிறைவு.. நிதிஷ், சந்திரபாபு பங்கேற்பு.. அடுத்து என்ன?
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், என்டிஏ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. கூட்டத்திற்கு பின்பு சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் கடிதம் வழங்கி பாஜகவுக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
17 வது லோக்சபாவை கலைக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்றே ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.. எக்ஸிட் போல் முடிவுகள் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறிய நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாகவே இருந்தது. 400+ இடங்கள் என்று சொல்லித் தேர்தலை எதிர்கொண்ட பாஜகவுக்கும் மிகப் பெரிய ஷாக் காத்திருந்தது.
ஏனென்றால் பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. 543 சீட்களை கொண்ட நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க எந்தவொரு கட்சியும் 272 இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால், பாஜக 240 இடங்களில் மட்டுமே வெல்ல கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் 16 சீட்களிலும், ஜேடியு 12 சீட்களிலும், ஷிண்டே சிவசேனா 6 சீட்களிலும் வென்றன.
இதனால் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலே ஏற்பட்டது. இப்போது பாஜக ஆட்சியை அமைக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவு நிச்சயம் தேவை என்ற ஒரு சூழலே உருவாகி இருக்கிறது. இதற்கிடையே பாஜக ஏற்கனவே ஆட்சியை அமைக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி இன்று பிரதமர் மோடி இல்லத்தில் கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், யார் ஆட்சியை அமைக்கப் போகிறார்கள் என்று தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜேடியு தலைவர் நிதிஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்பு சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் கடிதம் வழங்கி பாஜகவுக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றே ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 17 வது லோக்சபாவை கலைக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications