அசாதுதீன் ஓவைசி எம்.பி. பதவி பறிபோகிறதா.. நாடாளுமன்றத்தில் எழுப்பிய கோஷத்தால் காத்திருக்கும் ஆபத்து
டெல்லி: நாடாளுமன்றத்தில் புதிய எம்பிக்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில், 'ஜெய் பாலஸ்தீனம்' என அசாதுதீன் ஓவைசி பதவியேற்கும்போது முழக்கமிட்டிருந்தார். இதற்காக அவர் எம்பி பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்த நிலையில், ஹாட்ரிக் வெற்றி என்கிற எதிர்பார்ப்புடன் பாஜக தேர்தலை எதிர்கொண்டது. அதேபோல பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் தேர்தலை தீவிரமாக எதிர்கொண்டது. தேர்தல் முடிவில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் என்டிஏ கூட்டணி கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றியிருந்தன.

இதனையடுத்து மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்திருக்கிறது.
இந்நிலையில் நேற்றும், நேற்று முன்தினமும் புதிய எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டனர். 18வது லோக்சபாவின் முதல் நாளான நேற்று முன்தினம், இந்தியா கூட்டணி எம்பிக்களின் கையில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர். அதேபோல பதவியேற்கும் போதும் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழகத்திலிருந்து பதவியேற்ற எம்பிக்கள் நீட் வேண்டாம், அரசியலமைப்பை பாதுகாப்போம், தலித்துக்கள் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்றுகூறி பதவியேற்றுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து பதவியேற்றுக்கொண்ட தெலுங்கானாவின் ஹைதராபாத் தொகுதி எம்பி அசாதுதீன் ஓவைசி, "ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம்" என்று கூறி பதவியேற்றுள்ளார். இது தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. பாலஸ்தீன விவகாரத்தில், அந்நாட்டுக்கு இந்திய அரசு தன்னுடைய முழு ஆதரவை கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், 'ஜெய் பாலஸ்தீனம்' என்று முழங்கியதற்காக அசாதுதீன் ஓவைசியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். பாஜகவின் தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான அமித் மாளவியா, "தற்போதுள்ள விதிகளின்படி, பாலஸ்தீனம் குறித்து முழங்கியதற்காக அசாதுதீன் ஒவைசி தனது மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம்" என்று x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், லோக்சபா உறுப்பினருக்கான தகுதி குறித்த விதிகளையும் பகிர்ந்திருக்கிறார். அதில், "அவர் இந்தியாவின் குடிமகனாக இல்லாவிட்டால், அல்லது ஒரு வெளிநாட்டு மாநிலத்தின் குடியுரிமையை தானாக முன்வந்து பெற்றிருந்தால், அல்லது வெளிநாட்டிற்கு விசுவாசமான செயல்பாடுகள் இருந்தால் அவர் லோக்சபா உறுப்பினருக்கு தகுதியற்றவர்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பின்னணி: பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டிருக்கிறது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி திடீரென தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications