பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் சிங்குக்கு சீட் இல்லை.. மகனை களத்தில் இறக்கும் பாஜக!
டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய பாஜக எம்.பி ப்ரஜ் பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காமல், அவரது மகன் கரண்பூஷன் சிங்கை, உத்தர பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங், 2016 - 2019 வரையிலான காலத்தில் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எனினும், பிரிஜ் பூஷன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டம் வலுவடைந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது.
போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாடு முழுவதும் கண்டனம் வலுத்ததை அடுத்து போலீசார் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆறு முறை எம்.பியான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு பாஜக மீண்டும் சீட் வழங்குமா என்ற கேள்வி எழுந்தது. எனினும் மீண்டும் பிரிஜ் பூஷன் சிங்குக்கு சீட் கிடைக்கும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் அவருக்கு பதிலாக அவரது மகனுக்கு சீட் வழங்கியுள்ளது பாஜக தலைமை.
பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார்கள் நாட்டையே அதிர வைத்த சூழலிலும் அவரை ஓரங்கட்ட விரும்பாத பாஜக, பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு அப்பகுதியில் உள்ள அரசியல் செல்வாக்கு காரணமாக, அவருக்குப் பதிலாக அவரது மகனை வேட்பாளராக தேர்வு செய்துள்ளது.
பிரஜ் பூஷன் சிங்கின் மூத்த மகன் பிரதிக் பூஷன் சிங் தற்போது எம்எல்ஏவாக உள்ளார். இளைய மகன் கரண் பூஷன் சிங் தற்போது உத்தர பிரதேச மல்யுத்த அமைப்பின் தலைவராக உள்ளார். இந்நிலையில், கைசர்கஞ்ச் தொகுதி வேட்பாளராக கரண் பூஷன் சிங் களமிறக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications