மணிப்பூர் புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் விழிபிதுங்கும் பாஜக-அமலாகிறது ஜனாதிபதி ஆட்சி?
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாமல் பாஜக விழிபிதுங்கி வருகிறது. இதனையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி எந்த நேரத்திலும் அமலாகும் சூழ்நிலை நிலவுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மைத்தேயி- குக்கி இன மக்களிடையே பெரும் மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலின் உச்சகட்டமாக், குக்கி இனக்குழுவினர் தங்களது சுயாட்சி நிர்வாக கவுன்சில் கோரி ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக பெறப்படும் ஆயுதங்கள் மூலம் மைத்தேயி இன மக்களுக்கு எதிரான 'அழித்தொழிப்பு' நடவடிக்கைகளையும் குக்கி இனமக்கள் மேற்கொண்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, மணிப்பூர் விவகாரத்தை சரியாக கையாளவில்லை; மணிப்பூர் வன்முறைகளைத் தடுக்க தவறிவிட்டது; மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட செல்லாதது ஏன்? என்பது உள்ளிட்ட விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்றமும் மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் தலையிட்டிருந்தது.
இந்த நிலையில் மணிப்பூரில் புதிய திருப்பமாக, முதல்வர் பிரேன் சிங் (பைரேன் சிங்) தமது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதனால் அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக மணிப்பூரில் ஆளும் பாஜக, புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆனால் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் பாஜக எம்.எல்.ஏக்களிடையே ஒருமித்த கருத்து உருவாக்கப்பட முடியவில்லை. இதனால் டெல்லி பாஜக மேலிடம் விழிபிதுங்கி நிற்கிறது.
இதே நிலைமை நீடித்தால் மணிப்பூரில் எந்த நேரத்திலும் ஜனாதிபதி ஆட்சி அமலாக வாய்ப்புகள் உள்ளன என்கின்றன டெல்லி வட்டாரங்கள். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு இன்று முக்கிய முடிவு எடுக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications