லோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கையை 543-ல் இருந்து 1,000 ஆக உயர்த்தப்படுகிறதா? பரபர விவாதங்கள்
டெல்லி: லோக்சபாவில் தற்போதைய எம்.பி.க்கள் எண்ணிக்கையை 543-ல் இருந்து 1,000 ஆக உயர்த்த மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி தெரிவித்திருப்பது பரபர விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, லோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆலோசனை வழங்கி இருந்தார். இருந்தபோதும் இது தொடர்பாக பெரிய விவாதங்கள் முன்னெடுக்கப்படாமல் இருந்தன.
தற்போது நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டிடத்தில் லோக்சபாவில் தற்போதைய எண்ணிக்கையைவிட கூடுதல் எம்.பி.க்கள் உட்காரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பாக கருத்து தெரிவித்த லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, லோக்சபாவில் 888 எம்.பிக்கள் அமரும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கூட்டு கூட்டத் தொடர் காலங்களில் மொத்தம் 1,224 எம்.பிக்கள் ஒன்றாக அமரும் அளவுக்கு கட்டப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.

1,000 எம்.பிக்களா?
இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக எம்.பி.க்கள் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. எம்.பிக்கள் என்னிடம் கூறினர். புதிய நாடாளுமன்ற கட்டிடமும் 1,000 எம்.பி.க்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இப்படி எல்லாம் செய்வதற்கு முன்னர் மக்களின் கருத்துகளைப் பெற வேண்டும் என மணீஷ் திவாரி கூறியிருந்தார்.

தென்னிந்தியாவுக்கு பாதிப்பு?
இதனையடுத்து 1,000 எம்.பி.க்களாக உயர்த்தினால் ஏற்படும் சாதகம்? பாதகம்? குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள், 10 லட்சம் வாக்காளர்களுக்கு 1 லோக்சபா எம்.பி. அடிப்படையில் 1,000 எம்.பி.க்கள் திட்டத்தை நிறைவேற்ற விரும்புகிறார்கள். அப்படி செய்தால் பா.ஜ.க. வெல்ல முடியாத தென்னிந்திய மாநிலங்களுக்கு பெரும்பாலான நிதி ஒதுக்கீடுகள், நலத்திட்டங்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிடும். ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியலையே இது தலைகீழாக மாற்றும் முயற்சி என்கின்றனர்.

மக்கள் தொகை அடிப்படையிலா?
இன்னொரு பக்கம் மக்கள் தொகை அடிப்படையில் நீங்கள் இப்படி லோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கையை கணக்கிட்டால், மக்கள் தொகை கட்டுப்பாட்டு கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிற தென்னிந்திய மாநிலங்களுக்கு குறைவான எம்.பி.க்களும் மக்கள் தொகை கட்டுப்பாட்டு கொள்கையை முழுமையாக செயல்படுத்தாத வட இந்திய மாநிலங்களுக்கு அதிகமான எம்.பி.க்களும் கிடைக்கும். அதனால் தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதகமான நிலை வரும் என்கிற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஆகையால் இது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டுதான் முடிவெடுக்க வேண்டும் என்கிறார் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்.

ராஜ்யசபா எம்.பி. இடங்கள்
இந்த முரண்பாடுகளுக்கு இடையே லோக்சபா எம்.பிக்கள் எண்ணியை உயர்த்தினால் மாநிலங்களின் பிரதிநிதிகளுக்கான ராஜ்யசபாவில் எம்.பி.க்கள் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் எனவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. பொதுவாக மக்களிடம் கருத்துகளை கேட்டும் விவாதங்களை நடத்தியும்தான் எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்கிற கருத்து வலுவாக உள்ளது.












Click it and Unblock the Notifications