கண் துடைப்புக்காக பாஜக கொண்டு வருகிறது.. மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து கனிமொழி எம்.பி விமர்சனம்
டெல்லி: டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கனிமொழி எம்பி இந்த மசோதாவை பாஜக கண் துடைப்புக்காக கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தை கூட்ட இருப்பதாக மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த சில வாரங்களில் சிறப்பு கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பு வெளியானது பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது. இந்த கூட்டத் தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின.

சிறப்பு கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் எதையும் வெளிப்படையாக மத்திய அரசு அறிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று கூடியது. நேற்றைய அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால சிறப்புகள், முக்கிய முடிவுகள், நிகழ்வுகளை குறிப்பிட்டு வரலாறு குறித்து பேசினார்.
அவரை தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாற்றை நினைவுகூர்ந்தனர். நாடாளுமன்ற கூட்டத்துக்கு பின் மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்த முக்கிய கோரிக்கையான பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி முடிவு செய்யப்பட்டது.
இந்த சிறப்புக் கூட்டத்தொடரிலேயே அந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில். கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றது. இன்று அவை கூடியதும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்து இருக்கிறார்.
இந்த மசோதா மீதான விவாதம் நாளை நடைபெறும் என்று தெரிகிறது. இதனிடையே, மகளிருக்கு 33 % இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக கண் துடைப்புக்காக கொண்டு வந்துள்ளது என திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி எம்.பி இவ்வாறு சாடினார். மேலும், தேர்தல் வாக்கு வங்கிக்காக மசோதா பயன்படுத்தப்படுகிறது எனவும் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications