பிரதமர் மோடியின் புது வியூகம்.. ஸ்டன் ஆன எதிர்க்கட்சிகள்.. காங்கிரஸ் & ஆம் ஆத்மியை காலி செய்ய பிளான்
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் பாஜக புதிய வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் பஞ்சாபில் மீண்டும் அரசியல் களம் மாறுகிறது. அங்கே எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பாஜக மற்றும் சிரோமணி அகாலி தளம் இடையே மீண்டும் கூட்டணி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளுக்கு ஜூன் 1ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலுக்கு சில காலம் இருந்தாலும் கூட தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய அங்கே அனைத்து கட்சிகளும் தீவிரமாக முயன்று வருகிறது.
பஞ்சாபில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என இரு கட்சிகளுமே வலுவாக இருக்கிறது. இதனால் இரு கட்சிகளும் தனித்தனியாகத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளன. அதேநேரம் அங்கே எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பாஜக அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முயல்கிறது. இரு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மை தான் என்று பாஜக செய்தி தொடர்பாளர் எஸ்.எஸ்.சன்னி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எஸ்.எஸ்.சன்னி மேலும் கூறுகையில், "பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை முழுமையாக நடந்து முடியக் கூடுதல் கால அவகாசம் ஏற்படும். வரும் மார்ச் 22ஆம் தேதி அகாலி தளம் கோர் கமிட்டி கூட்டத்தை நடத்தும். அதன் பிறகே பாஜக மற்றும் எஸ்ஏடி இடையே முறையான கூட்டம் நடைபெறும். கூட்டணி குறித்து இறுதி முடிவை டெல்லி தலைமை தான் எடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
சிரோமணி அகாலி தளத்தின் ஆலோசனைக் கூட்டம் சண்டிகரில் நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்பதை அக்கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் பொதுச் செயலாளருமான டாக்டர் தல்ஜித் சிங் சீமா உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கோர் கமிட்டி கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிப்போம். இதில் ஒரே சிந்தனை கொண்ட கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து நாங்கள் முடிவெடுப்போம்" என்றார்.
பஞ்சாபைப் பொறுத்தவரை அங்க விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுப்போர் பஞ்சாப் விவசாயிகள் தான். விவசாயிகள் விவகாரத்தில் பாஜக அரசு தீர்வை தரவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் சீக்கிய கைதிகளின் விடுதலை போன்ற விவகாரங்களில் பாஜக முடிவை தராததால் அகாலி தளம் கூட்டணி அமைக்க முதலில் தயங்கியே இருக்கிறது. இருப்பினும், தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே கூட்டணி அமைக்கும் முடிவுக்கு அகாலி தளம் வந்ததாகக் கூறப்படுகிறது.
பஞ்சாபில் மொத்தம் 13 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அதிகபட்சமாகக் காங்கிரஸ் 8 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜக மற்றும் அகாலி தளம் தலா இரண்டு இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) ஒரு இடத்தையும் பெற்றன. அப்போது பாஜக மற்றும் அகாலி தளம் ஒரே அணியில் இருந்து லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது.
இருப்பினும், அதற்கு அடுத்தாண்டே இந்த கூட்டணி முறிந்தது. 2020 செப்டம்பரில், மத்திய அரசு விவசாய சட்டங்களைக் கொண்டு வந்த போது அதற்கு எதிராக மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடந்தது. இதனால் சிரோமணி அகாலி தளம் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் கூட 'ஒரு நாடு, ஒரே தேர்தல்' மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல விவகாரங்களில் பாஜகவுக்கு அகாலி தளம் தொடர்ந்து ஆதரவே அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications