யுபிஎஸ்சியில் இடஒதுக்கீடு இல்லாமல் நியமனம்- பாஜக கூட்டணியில் பிளவு! ஜேடியூ, எல்ஜேபி கடும் எதிர்ப்பு!
டெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி, மத்திய அரசு அதிகாரிகளை இடஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக நியமனம் செய்வதற்கு மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், லோ ஜனசக்தி(பஸ்வான்) ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதில் 10 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குனர், துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான நியமன அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. இந்த நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை. இதில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டிருந்தால் 22 முதல் 23 இடங்கள் தலித், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கும். ஆனால் நேரடி நியமனம் என யுபிஎஸ்சி அறிவித்திருப்பதால் இந்த இடஒதுக்கீட்டு உரிமை பறிக்கப்பட்டுவிட்டது என்பது காங்கிரஸ், ஆர்ஜேடி, திமுக உள்ளிட்ட கட்சிகளின் குற்றச்சாட்டு.

காங்கிரஸ், திமுக எதிர்ப்பு: இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரான லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மோடி அரசானது தலித்- பழங்குடிகள்- இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு உரிமையை பறித்திருப்பது அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதல் என விமர்சித்தார். தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். யுபிஎஸ்சியின் இந்த இடஒதுக்கீடு பறிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
நிதிஷ்குமாரின் ஜேடியூ கடும் எதிர்ப்பு: இந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளும், யுபிஎஸ்சியின் இந்த இடஒதுக்கீடு பறிப்பு மோசடியை வன்மையாகக் கண்டித்துள்ளன. நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் தேசிய செய்தித் தொடர்பாளருமான கேசி தியாகி கூறுகையில், நாங்கள் ராம் மனோகர் லோகியாவை பின்பற்றுகிறவர்கள். நாங்கள் பல்லாயிரமாண்டுகளாக சமூக ரீதியாக அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டவர்கள்.. எங்களிடம் எதற்காக மெரிட்டை எதிர்பார்க்கிறீர்கள்? இடஒதுக்கீடு மூலம்தான் அதிகாரிகளை யுபிஎஸ்சி நியமிக்க வேண்டும். யுபிஎஸ்சியின் இந்த அறிவிக்கை பெரும் வருத்தத்தைத் தருகிறது என்றார்.
மத்திய அமைச்சர் சிராக் எதிர்ப்பு: மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான சிராக் பஸ்வானும் யுபிஎஸ்சியின் இந்த அறிவிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் கூறுகையில், இடஒதுக்கீடு என்பதில் சமரசமே கிடையாது. தற்போது தனியார் துறையில்தான் இடஒதுக்கீடு இல்லை. அரசு வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு கிடையாது என்றால் எப்படி ஏற்பது? எந்த ஒரு அரசு நியமனத்திலும் இடஒதுக்கீடு முறை கண்டிப்பாகப் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்றார்.
தெலுங்குதேசம் ஆதரவு: ஆனால் பாஜகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான தெலுங்குதேசம், யுபிஎஸ்சியின் இடஒதுக்கீட்டு பறிப்பை ஆதரிக்கிறது. யுபிஎஸ்சியின் இந்த நேரடி நியமனத்தை ஆதரிக்கிறோம் என தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் தெரிவித்திருக்கிறார். மத்தியில் ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சிகளே யுபிஎஸ்சியின் இடஒதுக்கீட்டு பறிப்புக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications