’இந்தியா’ கூட்டணி உடையும்- இலவு காத்த பாஜக கூட்டணி தலையில் ‘இடி’ விழுந்தது- அதிமுக அதிரடி எஸ்கேப்!
டெல்லி: 28 கட்சிகளைக் கொண்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எப்போது உடையும்? எப்போது சிதறும்? என இலவு காத்த கிளியாக இருந்த பாஜகவின் தலையில் பேரிடியை தூக்கி போட்டுவிட்டது அதிமுக. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2-வது பெரிய கட்சியான அதிமுக அந்த கூட்டணியைவிட்டே தப்பி ஓடிவிட்டது அதிகாரப்பூர்வமாக!
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு "இந்தியா" கூட்டணியை எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கின. மாநிலங்களில் எதிரிகளாக இருந்தாலும் தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த பரம வைரிகளாக இருந்த கட்சிகளும் கை கோர்த்தன. "இந்தியா" கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் இதுவரை இடம் பெற்றுள்ளன.

பாஜகவின் கணக்கு: "இந்தியா" கூட்டணி என்பது உருவாகவே உருவாகாது; "இந்தியா" கூட்டணி உருவானாலும் நிலைக்காது என கணக்குப் போட்டு காத்திருந்தது பாஜக. ஆனால் பாட்னாவில் 16 கட்சிகளுடன் தொடங்கிய "இந்தியா" கூட்டணி மும்பையில் 28 கட்சிகளின் ஐக்கியம் என விஸ்வரூபம் எடுத்து நின்றது.
2-வது பெரிய கட்சி அதிமுக: இதனால் அரண்டுபோன பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தை திடுதிப்பென கூட்டியது. மொத்தம் 38 கட்சிகளைக் கொண்டது எங்கள் கூட்டணி என மார் தட்டியது பாஜக. உண்மையில் பல லெட்டர் பேடு கட்சிகளையும் வடகிழக்கு மாநில கட்சிகளையும் கட்டி இழுத்துக் கொண்டு கூட்டணியில் ஒட்ட வைத்திருந்தது பாஜக. அந்தக் கூட்டணியில் 2-வது பெரிய கட்சியே அதிமுகதான் என்ற நிலைமைதான் இருந்தது.
உடையாத இந்தியா அணி: அதேநேரத்தில் எப்படியாவது "இந்தியா" கூட்டணியை உடைத்து சிதறு தேங்காயாக்கிவிடுவது என கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்தது பாஜக. உதயநிதி ஸ்டாலினின் சனதான ஒழிப்பு முழக்கத்தை வைத்து சிண்டு முடிந்தும் பார்த்தது. ம்ஹூம்.. இம்மியளவு கூட "இந்தியா" கூட்டணியில் கிராக் விழுவதாகத் தெரியவில்லை.
பாஜகவுக்கு பெரும் அடி: இந்த நிலையில்தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது அதிமுக. தமிழ்நாடு பாஜக தலைமையின் போக்கால் வெறுத்துப் போன அதிமுக, ஒட்டுமொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தே விலகுகிறோம்; லோக்சபா தேர்தலில் தனி கூட்டணியையை அமைத்துக் கொள்வோம் என பிரகடனம் செய்துவிட்டது. அதாவது "இந்தியா" கூட்டணி உடையும் என காத்திருந்த பாஜகவுக்கு தம் சொந்த கூட்டணியை விட்டே 2-வது பெரிய கட்சியே தப்பி ஓடியிருப்பது மிகப் பெரிய அதிர்ச்சிதான் - பெரும் தோல்விதான் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications